50 படுக்கைகளுக்கு மேல் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகள் ஆக்சிஜனை உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்; மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி உத்தரவு


சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே
x
சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே
தினத்தந்தி 16 April 2021 9:38 AM GMT (Updated: 16 April 2021 9:38 AM GMT)

தனியார் ஆஸ்பத்திரிகள் ஆக்சிஜனை உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே உத்தரவிட்டு உள்ளார்.

ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்

மராட்டியத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில் தனியார் ஆஸ்பத்திரிகள் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை அமைத்து கொள்ள வேண்டும் என மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

50 படுக்கைகளுக்கு மேல் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகள் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை அமைத்து கொள்ள வேண்டும். இந்த ஆஸ்பத்திரிகள் இனிமேல் மருத்துவ தேவை ஆக்சிஜனுக்கு மாநில அரசை நம்பி இருக்க கூடாது. ஆக்சிஜனை சேகரித்து 95 முதல் 98 சதவீதம் சுத்திகரித்து நோயாளிகளுக்கு கொடுக்க முடியும். இது சாத்தியமான, மலிவான ஒன்று தான். இது மாநில அரசின் சுமையை குறைக்கும்.

ஒருங்கிணைப்பு கமிட்டி

தற்போது தினமும் 1,500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி சத்தீஸ்கர், தெலுங்கானா, ஜார்கண்ட், ஒடிசா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் மராட்டியத்திற்கு ஆக்சிஜன் சப்ளை செய்து வருகிறது. மாநிலத்தில் ஆக்சிஜன் சப்ளையை கண்காணிக்க சுகாதாரத்துறை கமிஷனர் தலைமையில் ஒருங்கிணைப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல மும்பையில் ஆக்சிஜன் சப்ளையை கண்காணிக்க 6 அதிகாரிகள் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளனர்.


Next Story