சீர்காழி பகுதியில் தொடர் மழையால் உளுந்து அறுவடை பணி பாதிப்பு விவசாயிகள் கவலை


சீர்காழி பகுதியில் தொடர் மழையால் உளுந்து அறுவடை பணி பாதிப்பு விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 16 April 2021 4:19 PM GMT (Updated: 16 April 2021 4:19 PM GMT)

சீர்காழி பகுதியில் பெய்த தொடர் மழையால் உளுந்து அறுவடை பணி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

சீர்காழி, 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சீர்காழி, தென்பாதி, கீழ தென்பாதி, செம்மங்குடி, விநாயகக்குடி, திருக்கருகாவூர், கடவாசல், எடமணல், வழுதலைகுடி, விளந்திட சமுத்திரம், அத்தியூர், பட்டவிளாகம், நிம்மேலி, கொண்டல், மருதங்குடி, ஆதமங்கலம், பெருமங்கலம், புங்கனூர், திருப்புங்கூர், கன்னியாகுடி, கதிராமங்கலம், எடக்குடி வடபாதி, சட்டநாதபுரம், திட்டை, தில்லைவிடங்கன், காரைமேடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சம்பா நெல் அறுவடை செய்த பின்னர் உளுந்து உள்ளிட்ட பயறு வகைகளை சாகுபடி செய்திருந்தனர்.

இந்நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த உளுந்து உள்ளிட்ட பயறு வகைகளை விவசாயிகள் கடந்த ஒரு வாரமாக அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த உளுந்து உள்ளிட்ட பயறு வகைகள் மழைநீரில் நனைந்ததால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் திணறி வருகிறார்கள்.

விவசாயிகள் கவலை

மேலும் அறுவடை செய்யப்பட்ட உளுந்து மழை நீரில் நனைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். எனவே தொடர் மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து உள்ளிட்ட பயிறு வகைகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

மேலும் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய காப்பீட்டு தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன.

Next Story