கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்துடன் புதிதாக 12 கிராமங்கள் இணைப்பு


கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்துடன் புதிதாக 12 கிராமங்கள் இணைப்பு
x
தினத்தந்தி 19 April 2021 4:24 PM GMT (Updated: 19 April 2021 4:24 PM GMT)

கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்துடன் புதிதாக 12 கிராமங்கள் இணைப்பு

கள்ளக்குறிச்சி

கல்வராயன்மலையில் 171 மலை கிராமங்களில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களின் பாதுகாப்பு நலன் கருதி கல்வராயன்மலை கரியாலூர் கிராமத்தில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. 

கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள மட்டப்பாறை, மாயம்பாடி, பொட்டியம், துரூர், புதுக்குட்டை, கல்படை, மல்லிகைபாடி, பரங்கியநத்தம் ஆகிய 8 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஏதாவது குற்ற சம்பவம், அடிதடி தகராறு தொடர்பாக புகார் கொடுக்க செல்ல வேண்டுமானால் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கரியாலூர் போலீஸ் நிலையத்துக்குத்தான் சென்று வர வேண்டும். இதற்கு ஒருநாள் ஆகிவிடுவதால் மிகவும் சிரமமாக இருப்பதாகவும் எனவே மேற்படி கிராமங்களை 2 கிலோ மீட்டர் தொலையில் உள்ள கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்துடன் இணைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்று மேற்படி 8 கிராமங்களையும் கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்துடன் இணைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட எலியத்தூர், தெங்கியாநத்தம், கடத்தூர் மற்றும் பாதரம்பாளையம் ஆகிய 4 கிராமங்களும் கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Next Story