13 வடமாநில தொழிலாளர்கள் தப்பி ஓட்டம்


13 வடமாநில தொழிலாளர்கள் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 20 April 2021 1:09 PM GMT (Updated: 20 April 2021 1:09 PM GMT)

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் 13 பேர் தப்பி ஓடி விட்டனர்.

வெள்ளகோவில்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் 13 பேர் தப்பி ஓடி விட்டனர்.
கோரோனா பாதிப்பு 
 வெள்ளகோவில் அருகே வெள்ளமடையில் ஒரு தனியார் நூல் மில் உள்ளது. இந்த மில்லில் 100க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த மில்லில் பணியாற்றும் தொழிலாளர்கள் 11 பேருக்கு கடந்த 6-ந் தேதி  காய்ச்சல் இருந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரும்  வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். சிகிச்சைக்கு பிறகு மில்லுக்கு சென்று விட்டனர்.
 சந்தேகத்தின் பெயரில் வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் 7-ந் தேதி  மில்லுக்கு சென்று மில்லில் இருந்த 48 தொழிலாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது, இதையடுத்து சுகாதாரத்துறை சார்பில் மில்லுக்கு ஆய்வுக்கு சென்றனர். அப்போது கொரோனா விதிமுறை கடைப்பிடிக்காத காரணத்தால் பொது சுகாதார சட்டத்தின்கீழ் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
தப்பி ஓட்டம்
 சிகிச்சைக்குப் பின் மில்லுக்கு வந்து குடியிருப்பு பகுதியில் தங்கியிருந்தனர். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட வட மாநிலத்தை சேர்ந்த 13 பேரை காணவில்லை. 
இவர்கள் மில்லை விட்டு தப்பி சொந்த மாநிலத்திற்கு சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து சுகாதார துறை, காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story