கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று மண்ணுக்குள் புதைத்த பெண்


கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று  மண்ணுக்குள் புதைத்த பெண்
x
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று மண்ணுக்குள் புதைத்த பெண்
தினத்தந்தி 20 April 2021 4:06 PM GMT (Updated: 20 April 2021 4:06 PM GMT)

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று மண்ணுக்குள் புதைத்த பெண்

கோவை

கோவை மாவட்டம் நெகமம் சந்திராபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 36). இவருடைய மனைவி அமுதா (36). கூலித் தொழிலாளர்கள். இவர்கள் கோவை அருகே மதுக்கரை மார்க்கெட் முனியப்பன் கோவில் வீதியில் வசித்து வந்தனர். 

இவர்கள் இருவரும் கடந்த 6 நாட்களுக்கு முன்பு மதுக்கரை எல் அண்டு டி பைபாஸ் ரோடு ஆர்.டி.ஓ. சோதனைச்சாவடி பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு கோல மாவு தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றினர்.


அதே நிறுவனத்தில் தங்கியிருந்து தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த சமுத்திர பாண்டியன் மகன் சங்கர் (32) என்பவர் வெல்டிங் வேலை செய்து வந்தார்.

தனிமையில் சந்தித்து உல்லாசம்

இந்த நிலையில் சங்கருக்கும், அமுதாவும் பழக்கம் ஏற்பட்டது. அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பார்த்து பேசி 6 நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் உல்லாசம் அனுபவிக்கலாம் என்று சங்கர் அமுதாவை அழைத்துள்ளார். 

வீட்டில் கணவர் நாகராஜ் மது அருந்தி விட்டு போதையில் தூங்கிக் கொண்டிருந்தார். இதை பயன்படுத்தி அமுதா வீட்டை விட்டு வெளியேறி தான் பணியாற்றும் நிறுவனத்திற்கு சென்றார். 

இதற்கிடையே தூக்கத்தில் இருந்து எழுந்த நாகராஜ் மனைவியை பார்த்தார். அவரை காணவில்லை. இதனால் அவரை தேடி தான் பணியாற்றும் நிறுவனத்துக்கு சென்றார். 

அங்கு அமுதாவும், சங்கரும் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்து நாகராஜ் அதிர்ச்சி அடைந்தார்.

மண்ணுக்குள் உடல் புதைப்பு
உடனே அவர், அமுதாவையும், சங்கரையும் கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சங்கர் அங்கு கிடந்த சுத்தியலை எடுத்து நாகராஜின் தலையில் ஓங்கி அடித்தும், கழுத்தை நெரித்தும் கொன்றார்.

இதையடுத்து நாகராஜன் உடலை யாருக்கும் தெரியாமல், இருவரும் சேர்ந்து அந்த நிறுவனத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த மண்ணை தோண்டி அதற்குள் புதைத்து மூடினர். பின்னர் அவர்கள் ஒன்றும் தெரியாதது போல் அங்கிருந்து சென்றனர்.

2 பேர் கைது

இந்த நிலையில் மறுநாள் காலையில் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மண் தோண்டப்பட்டு இருந்த இடத்தை பார்த்தனர். அதில் நாகராஜின் உடல் புதைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த னர்.

 இது குறித்த புகாரின் பேரில் தாசில்தார் நாகராஜ், பேரூர் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசலு, மதுக்கரை இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அவர்கள், நாகராஜின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இதில், அமுதாவும், சங்கரும், உல்லாசம் அனுபவிப்பதை நேரில் பார்த்த நாகராஜை அவர்கள் கொலை செய்து உடலை மண்ணில் புதைத்து மறைத்து வைத்தது தெரியவந்தது. இதையடுத்து சங்கர், அமுதா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

கள்ளக்காதல் ஏற்பட்டது எப்படி?

அமுதாவுக்கு, ஓவியர் குமார் என்பவருடன் ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். குமார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 

இதனால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நாகராஜை அமுதா திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவர்கள், கடந்த 6 நாட்களுக்கு முன்பு கோல மாவு தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தனர்.


அப்போது அங்கு வேலை பார்த்த சங்கருடன் அமுதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. மாற்றுத்திறனாளியான சங்கருக்கு அமுதா அவருக்கு ஆறுதலாக இருந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டது. 

அவர்கள், உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் இருவரும் சேர்ந்து நாகராஜை கொன்று மண்ணுக்குள் புதைத்தது தெரிய வந்தது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவரை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெண் கொன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story