தொடர் மழையால் கேத்தி-சேலாஸ் சாலையில் மண் சரிவு


தொடர் மழையால் கேத்தி-சேலாஸ் சாலையில் மண் சரிவு
x
தினத்தந்தி 20 April 2021 5:12 PM GMT (Updated: 20 April 2021 5:12 PM GMT)

தொடர் மழையால் கேத்தி-சேலாஸ் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழை ஒரு மணி நேரம் நீடித்தது. தொடர் மழையால் ஊட்டியில் இதமான காலநிலை நிலவி வருகிறது. 

கோடை மழை பெய்து வருவதால், உறைபனி காரணமாக வனப்பகுதிகளில் காய்ந்த புற்கள், செடிகள் பசுமைக்கு திரும்பி வருகின்றன. இதனால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் நீங்கி உள்ளது. பலத்த மழை காரணமாக ஊட்டி அருகே கேத்தியில் இருந்து சேலாஸ் செல்லும் சாலையோரத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. 

தொடர் மழையால் சாலையில் மண் சரிந்து விழுந்து கிடந்தது. இதனால் வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் இருந்து மண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-21.4, நடுவட்டம்-24, மசினகுடி-16, குந்தா-11, எமரால்டு-14, அவலாஞ்சி-10, கிண்ணக்கொரை-15, குன்னூர்-13.5, பர்லியார்-9, கேத்தி-36, கோத்தகிரி-35 உள்பட மொத்தம் 291.10 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 10.4 ஆகும்.


Next Story