திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி காருக்குள் தீக்குளித்து தற்கொலை


திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி காருக்குள் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 29 April 2021 4:30 PM GMT (Updated: 29 April 2021 4:30 PM GMT)

திண்டுக்கல்லில் ஓய்வுபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி காருக்குள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் ஆர்.எம்.காலனி 13-வது தெருவை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 75). இவர், ஊரக வளர்ச்சித்துறையில் இணை இயக்குனராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆவார். அவருடைய மனைவி ராமாத்தாள். இவர்களுக்கு ஆனந்த் என்ற மகனும், மலர்விழி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் 2 பேரும் வெளியூர்களில் டாக்டர்களாக பணியாற்றி வருகின்றனர். இதனால் குப்புசாமி தனது மனைவி ராமாத்தாளுடன் ஆர்.எம்.காலனி வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி 2 பேரும் வழக்கம் போல் பேசி கொண்டிருந்தனர். பின்னர் இரவு 10 மணிக்கு அவர்கள் தூங்குவதற்கு சென்றுவிட்டனர். மேலும் இவர்களின் காரை வீட்டின் அருகே நிறுத்தி இருந்தனர்.

இதற்கிடையே நேற்று அதிகாலை 3.45 மணிக்கு பயங்கர சத்தம் கேட்டது. அதை கேட்டு திடுக்கிட்டு எழுந்த ராமாத்தாள் மற்றும் அக்கம்பக்கத்தினர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது குப்புசாமியின் கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. மேலும் காருக்குள் முன்இருக்கையில் குப்புசாமி அமர்ந்த நிலையில் இருக்க, உடல் முழுவதும் தீ எரிந்து கொண்டிருந்தது.

இதையடுத்து அவர்கள் காரில் பிடித்த தீயை அணைக்க முயன்றனர். மேலும் திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் உடல் முழுவதும் தீயில் கருகிய நிலையில் இருந்த குப்புசாமியை பிணமாக மீட்டனர்.

இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராணி தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் குப்புசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதேபோல் வீட்டில் அவருடைய அறையிலும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர் எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில் உடல் உபாதைகள் இருப்பதால் தற்கொலை செய்து கொள்வதாக குப்புசாமி எழுதி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

எனவே, இரவு மனைவி தூங்கிய பின்னர் அவர் வீட்டில் இருந்து வெளியேறி காருக்குள் சென்று தனக்கு தானே தீ வைத்து இருக்கலாம். மேலும் அவர் காருக்குள் அமர்ந்த நிலையில் தீயில் எரிந்து இறந்துள்ளார். இதனால் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே அவர் எவ்வாறு இறந்தார் என்பது தெரியவரும் என்று போலீசார் கூறினர்.

Next Story