கொரோனா ஊரடங்கால் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கும் வாழைத்தார்கள்


கொரோனா ஊரடங்கால் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கும் வாழைத்தார்கள்
x
தினத்தந்தி 1 May 2021 6:17 PM GMT (Updated: 1 May 2021 6:17 PM GMT)

கீரமங்கலம் பகுதியில் கொரோனா ஊரடங்கால் வாழைத்தார்கள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கிறது.

கீரமங்கலம், மே.2-
கீரமங்கலம் பகுதியில் கொரோனா ஊரடங்கால் வாழைத்தார்கள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கிறது.
வாழைத்தார்
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், செரியலூர், சேந்தன்குடி, நகரம், பனங்குளம், குளமங்கலம், பாண்டிக்குடி, பெரியாளூர், நெய்வத்தளி, மேற்பனைக்காடு, கரம்பக்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
கஜா புயலுக்கு பிறகு விவசாயிகள் கறிவாழைத்தார்கள் உற்பத்தியை அதிகரித்துள்ளனர். இதனால் சராசரியாக விவசாயிகளுக்கு வருவாய் கிடைத்து வந்தது. இந்தநிலையில் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் திருமணம், காதணி விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 50 பேர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும் என்ற உத்தரவால் கடந்த சுப நிகழ்ச்சிகள் எளிமையாக நடத்தப்பட்டு வருகிறது.
அன்னதான நிகழ்ச்சிகள் ரத்து
இதனால் கல்யாண விருந்தில் வைக்கப்படும் பிரதான கூட்டு, பொறியலான வாழைக்காய்களின் தேவை குறைந்துவிட்டது. அதே போல கோவில்களில் அன்னதானம் வழங்கப்படும் போது, கூட்டு வாழைக்காய்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படும். திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதால் அன்னதான நிகழ்ச்சிகளும் ரத்தாகிவிட்டது. இதனால் வாழைக்காய்களின் தேவையும் குறைந்துவிட்டது.
அதே போல தற்போதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் கீரமங்கலம் பகுதியில் விளைந்துள்ள கறிவாழைத்தார்களை விவசாயிகள் கமிஷன் கடைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய முடியாமல் ஓரங்கட்டப்படுகிறது. இதனால் கறிவாழைத்தார்கள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Next Story