குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே குளத்தில் விஷம் கலக்கப்பட்டதால் மீன்கள் செத்து மிதந்தன.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டியில் பட்டத்தாய் குளம் உள்ளது.
கடந்த ஆண்டு பெய்த மழையினால் நிரம்பிய இந்த குளத்தை குத்தகைக்கு எடுத்து கணவாய்பட்டியை சேர்ந்த ராஜ்கபூர் (வயது45) என்பவர் மீன் குஞ்சுகளை வளர்த்து வந்தார்.
அந்த குளத்தில் கட்லா, ரோகு, புல்லுக்கெண்டை, பாரை, ஜிலேபி வகையை சேர்ந்த 12 ஆயிரம் மீன்குஞ்சுகளை அவர் விட்டு வளர்த்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை 7 மணிக்கு வழக்கம்போல் ராஜ்கபூர் குளத்துக்கு வந்தார்.
அப்போது 100-க்கும் மேற்பட்ட மீன்கள் ஆங்காங்கே செத்து மிதந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
குளத்தில் விஷம் கலக்கப்பட்டதால் மீன்கள் செத்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கோபால்பட்டி சுகாதார ஆய்வாளர் நல்லேந்திரன் சம்பவ இடத்துக்கு வந்து குளத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுதொடர்பாக சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் ராஜ்கபூர் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மாமரங்களுக்கு தெளிக்கக்கூடிய பூச்சி மருந்துகளை மர்ம நபர்கள் சிலர் குளத்தில் கலந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story