காரில் மது பாட்டில்கள் கடத்தல்: முன்னாள் ஊராட்சி தலைவர் கைது

காரில் மது பாட்டில்கள் கடத்தியதாக முன்னாள் ஊராட்சி தலைவர் கைது செய்யப்பட்டார்.
கொள்ளிடம் டோல்கேட்,
திருச்சி வாத்தலை போலீசாருடன் தனிப்படை போலீசார் இணைந்து குணசீலம் பகுதியில் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மண்ணச்சநல்லூர் அருகே உள்ள குருவம்பட்டியிலிருந்து குணசீலம் நோக்கி வந்த கார் ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த அட்டைபெட்டிகளை சோதனை செய்த போது, அதில் 150 மதுபாட்டில்கள் இருந்தன. விசாரணையில், கள்ளச்சந்தையில் விற்பதற்காக வெளிமாநில மற்றும் டாஸ்மாக் மதுபாட்டில்களை கடத்தி செல்வது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து காரை ஓட்டிவந்த குணசீலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ராமன்(வயது 47) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவர் முன்னாள் குணசீலம் ஊராட்சி தலைவர் என்பதும், தற்போது குணசீலம் கோவில் அருகே அவர் நடத்தி வரும் ஓட்டலில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அவருடைய ஓட்டலில் சோதனை செய்து, அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 100 மதுபாட்டில்களை கைப்பற்றினர். இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமனை கைது செய்து, 250 மதுபாட்டில்கள், காரை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story