அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை


அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 May 2021 7:29 PM GMT (Updated: 10 May 2021 7:29 PM GMT)

முழு ஊரடங்கு உத்தரவையொட்டி கடலூர் மாவட்டத்தில் 50 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதில் அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

கடலூர், 
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க நேற்று முதல் வருகிற 24-ந்தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் போலீசார் பொதுமக்கள், வியாபாரிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று டி.ஜி.பி. திரிபாதி அறிவுறுத்தி இருந்தார்.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மதியம் 12 மணிக்கு பிறகு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அதன்பிறகு அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக போலீசார் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணித்தனர்.

எச்சரிக்கை செய்தனர்

அப்போது மதியம் 1 மணி தாண்டியும் கடலூரில் வாகன ஓட்டிகள் சாலைகளில் வலம் வந்தனர். அவர்களை பிடித்து போலீசார் எச்சரிக்கை செய்தனர். அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் ஊழியர்களை மட்டும் அனுப்பி வைத்தனர். முழு ஊரடங்கு முதல் நாள் என்பதால் அனைவரையும் எச்சரிக்கை செய்து அனுப்பினர். மீண்டும் இதேபோல் தேவையின்றி சுற்றித்திரிந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரித்தனர்.
இது பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், முழு ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றித்திரியும் நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்டம் முழுவதும் 50 சோதனைச்சாவடிகளை அமைத்து கண்காணித்து வருகிறோம். மாவட்ட எல்லைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இந்த பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள் என்றார்.

Next Story