பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம்கள்; தென்காசி கலெக்டர் தகவல்


பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம்கள்; தென்காசி கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 14 May 2021 9:50 PM GMT (Updated: 14 May 2021 9:50 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும் என்று கலெக்டர் சமீரன் கூறினார்.

தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சமீரன், தென்காசி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எஸ்.ஜே.சிரு ஆகியோர் தலைமை தாங்கினார்கள். தனுஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜா, பழனி நாடார், சதன் திருமலைக்குமார், மனோஜ் பாண்டியன், கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் முடிந்த பிறகு மாவட்ட கலெக்டர் சமீரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் கொரோனா தடுப்பு குறித்து அரசு அலுவலர்கள் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 100 நாள் வேலைக்கு செல்பவர்களுக்கு தடுப்பூசிகள் போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடுவதற்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், தற்போதுள்ள தடுப்பூசி இருப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

மேலும் தூய்மை பணியாளர்களை கொண்டு மாவட்டம் முழுவதும் கிருமிநாசினி தெளிப்பது, நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு தற்காலிக தூய்மை பணியாளர்களை நியமிப்பது, தட்டுப்பாடு இன்றி ஆக்சிஜன் வழங்குவது போன்றவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. 
சிறப்பு முகாம்கள்
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை மற்ற மாவட்டங்களை காட்டிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அளவு குறைவாக தான் உள்ளது. தற்போதைய நிலவரப்படி ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் தடுப்பூசிகள் போதுமான அளவு உள்ளன. தற்போது 4 ஆயிரம் தடுப்பூசிகள் உள்ளன. தடுப்பூசிகள் போட வருபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவை அதிகரிக்கப்படும்.  
தடுப்பூசி போடுவதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாமில் 20 அல்லது 40 பேர் ஒன்றாக சேர்ந்து தடுப்பூசிகள் போடுவதன் மூலம் தடுப்பூசிகள் வீணாகாமல் தடுக்க முடியும். தற்போது ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் போதுமான அளவு தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் நெடுமாறன், அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story