தகட்டூரில் குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரையை அகற்றி தூர்வாரப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


தகட்டூரில் குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரையை அகற்றி தூர்வாரப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 16 May 2021 1:49 PM GMT (Updated: 16 May 2021 1:49 PM GMT)

தகட்டூரில் குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரையை அகற்றி தூர்வாரப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

வாய்மேடு,

நாகை மாவட்டம் தகட்டூர் கடைத்தெருவில் ஊத்தா வெட்டிக்குளம் உள்ளது. இந்த குளம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. குளத்தில் குப்பை கொட்டப்படுகிறது. மேலும் குளத்தை ஆகாய தாமரை ஆக்கிரமித்து புதர் போல் காட்சி அளிக்கிறது. இதனால் இந்த குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

மேலும் கழிவு பொருட்கள் குளத்தில் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்த படி செல்கின்றனர்.

ஆக்கிரமித்து ஆகாய தாமரை

ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்து புதர் மண்டி கிடப்பதால் குளத்தில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் செல்வதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றி தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story