ஆப்பக்கூடலில், தொற்றுக்கு கணவர் பலி: கொரோனா பாதித்த மனைவியும் துயரத்தால் தற்கொலை


ஆப்பக்கூடலில், தொற்றுக்கு கணவர் பலி: கொரோனா பாதித்த மனைவியும் துயரத்தால் தற்கொலை
x
தினத்தந்தி 20 May 2021 9:17 PM GMT (Updated: 20 May 2021 9:17 PM GMT)

ஆப்பக்கூடலில் தொற்றுக்கு கணவர் இறந்ததால் துக்கம் தாங்காமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மனைவியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்தியூர்
ஆப்பக்கூடலில் தொற்றுக்கு கணவர் இறந்ததால் துக்கம் தாங்காமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மனைவியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கணவர் தொற்றால் பலி
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த ஆப்பக்கூடல் நால் ரோடு பகுதியை சேர்ந்தவர் 58 வயது ஆண். இவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் கடந்த 14-ந் தேதி இறந்தார். பின்னர் அவரது உடல் கோவையிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து அவருடைய மனைவிக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. இதில் அவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை
கணவர் கொரோனா தொற்றால் இறந்துவிட்டார். தனக்கும் கொரோனா ஏற்பட்டுவிட்டதே என அவர் மனமுடைந்து காணப்பட்டு வந்தார். இந்தநிலையில் மனமுடைந்த அவர் தனது வீட்டில் மின்விசிறியில் சேலையை மாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து அவரது உடல் கொரோனா தடுப்பு விதிமுறைபடி அடக்கம் செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story