காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யும் நடமாடும் காய்கறி வாகனங்கள்


காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யும் நடமாடும் காய்கறி வாகனங்கள்
x
தினத்தந்தி 25 May 2021 12:56 AM GMT (Updated: 25 May 2021 12:56 AM GMT)

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு சார்பில் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யக்கூடிய நடமாடும் காய்கறி வாகனத்தை மாவட்ட கலெக்டர், அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

காஞ்சீபுரம்,

கொரோனா வைரஸ் பரவல் தடுக்கும் பொருட்டு ஒரு வாரத்திற்கு தளர்வில்லா முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மற்றும் முழு ஊரடங்கை கருத்தில் கொண்டு காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவற்றை வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யக்கூடிய நடமாடும் வாகனங்களை காஞ்சீபுரம் அறிஞர் அண்ணா அரங்கம் அருகே மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் எம்பி. ஜி.செல்வம், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ., சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பிறகு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தோட்டக்கலைத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் விதமாக மொத்தம் 225 நடமாடும் வாகனங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் காஞ்சீபுரம் பெரு நகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளிலும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க 88 நடமாடும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி, வட்டாட்சியர் நிர்மலா உள்பட கலந்து கொண்டனர்.

அச்சரப்பாக்கம்

அதேபோல் அச்சரப்பாக்கத்தில் அரசின் சார்பில் வாகனங்களில் வீடுகளுக்கே காய்கறிகள் விற்பனை செய்யும் திட்டம் நேற்று காலை தொடங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் மற்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் உள்ள வீடுகளுக்கே சென்று காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்ய 27 வாகனங்களை அச்சரப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் சு.வீரமுத்து, இ.மாலதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதேபோல் அச்சரப்பாக்கம் பேரூராட்சி பகுதிகளுக்கு வாகனத்தில் சென்று காய்கறிகள் விற்பனையை பேரூராட்சி செயல் அலுவலர் மா.கேசவன் தொடங்கி வைத்தார்.

உத்திரமேரூர்

உத்திரமேரூர் பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு வாகனங்கள் மூலம் தினந்தோறும் காய்கறிகள் மற்றும் பழங்கள் வினியோகம் செய்ய நடமாடும் காய்கறி அங்காடி துவக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவில் உத்திரமேரூர் எம்.எல்.ஏ.க.சுந்தர் கலந்து கொண்டு நடமாடும் காய்கறி அங்காடியை துவக்கி வைத்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், வேல்முருகன், பேரூராட்சி செயல் அலுவலர் லதா, மற்றும் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், நகர செயலாளர் பாரி வள்ளல், பொறியாளர் அணி சசிகுமார் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கல்பாக்கம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியில் வந்து கடைகளில் தங்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகைப்பொருடகள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து 6 வேன்களில் காய்கறிகள் பழங்கள் மற்றும் மளிகைப்பொருள்களுடன் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலா் திருஞானசம்பந்தம் பேசும்போது, ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் இங்குள்ள 18 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு 3 வார்டுக்கு ஒரு வேன் என 6 வாகனங்கள் மூலம் அரசு நிர்ணயித்த விலையில் காய்கறிகள், பழங்கள் மளிகைப்பொருட்கள் அவர்கள் வசிப்பிடத்திலேயே கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

பூந்தமல்லி

குன்றத்தூர் மற்றும் மாங்காடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாகனங்களில் வழங்கும் பணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

குன்றத்தூர் பேரூராட்சிக்கு 36, மாங்காடு பேரூராட்சிக்கு 25 என மொத்தம் 61 வாகனங்களில் பொதுமக்களுக்கு வாகனங்களில் காய்கறிகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டது.

மேலும் கூடுதல் விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அதிக விலைக்கு விற்பது குறித்து பேரூராட்சி, நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் அந்த வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

வண்டலூர்

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள மண்ணிவாக்கம் ஊராட்சியில் நடமாடும் வாகனத்தின் மூலம் காய்கறிகள், பழங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் பணியை செங்கல்பட்டு மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ரீதர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

உதவி திட்ட அலுவலர்கள் எழில்மொழி, வால்டர் பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு, ஹரிகிருஷ்ணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோஜ்குமார், சரவணன், மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற செயலர் டி.ராமபக்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நடமாடும் வாகனம் மண்ணிவாக்கம் ஊராட்சியில் வீதி வீதியாக சென்று பொதுமக்கள் காய்கறிகள் பழங்களை வினியோகம் செய்தனர்.

Next Story