முழு ஊரடங்கை கண்காணிக்க 1,400 போலீசார் பாதுகாப்பு: கொரோனா விதிமுறைகளை மீறியதாக 2 ஆயிரம் பேர் மீது வழக்கு


முழு ஊரடங்கை கண்காணிக்க 1,400 போலீசார் பாதுகாப்பு: கொரோனா விதிமுறைகளை மீறியதாக 2 ஆயிரம் பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 25 May 2021 1:15 AM GMT (Updated: 25 May 2021 1:15 AM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக 2 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஐ.ஜி.சங்கர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக பலி எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதைதொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நேற்று 24-ந்தேதியில் இருந்து ஒருவார காலம் வருகின்ற 31-ந்தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்திருந்தது.

அப்போது மளிகை, காய்கறி என எந்த கடைகளும் திறக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று திருவள்ளூர் நகரின் முக்கிய பகுதியான காமராஜர் சிலை அருகே ஐ.ஜி. சங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி உரிய இ-பதிவு உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு முக கவசம், கையுறை, மற்றும் கபசுர குடிநீரை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை கண்காணிக்க 1,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாவட்டம் முழுவதும் 40 இடங்களில் போலீசார் ஆங்காங்கே தடுப்புகளை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

2 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்

இதுவரையில் திருவள்ளூர் மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் வந்தது, உரிய சமூக இடைவெளியை கடை பிடிக்காதது, தேவையின்றி சுற்றித்திரிந்த நபர்கள் என விதிமுறைகளை மீறி வந்த 2 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எனவே பொதுமக்கள் கொடிய நோயானா கொரோனா வைரசை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவை அனைவரும் கடைப்பிடித்து பாதுகாப்பாக வீட்டிலிலேயே இருக்கவும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

அவருடன் டி.ஐ.ஜி சாமுண்டீஸ்வரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மீனாட்சி, முத்துக்குமார் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அருள் முருகன், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துரைப்பாண்டியன், இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராக்கிகுமாரி, சக்திவேல், சுரேஷ், பூபாலன் மற்றும் போலீசார் பலர் உடனிருந்தனர்.

Next Story