கொரோனா தொற்றால் பெண் தூய்மை பணியாளர் உயிரிழப்பு


கொரோனா தொற்றால் பெண் தூய்மை பணியாளர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 30 May 2021 7:37 PM GMT (Updated: 30 May 2021 7:37 PM GMT)

மதுரையில் கொரோனா தொற்றால் பெண் தூய்மை பணியாளர் உயிரிழந்தார்

மதுரை
மதுரையில் கொரோனா தொற்றால் பெண் தூய்மை பணியாளர் உயிரிழந்தார்.
தூய்மைப்பணியாளர்கள்
கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை நாடு முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இந்த நிலையில், முன்களப்பணியாளர்கள் கொரோனாக்கு எதிரான போராட்டத்தில் கடுமையாக பணியாற்றி வருகின்றனர். 
தென் தமிழகத்தில் அதிநவீன வசதிகளோடு பல்நோக்கு மருத்துவமனையாக செயல்படும் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் மதுரை மட்டுமில்லாது தென்மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1500-க்கும் மேற்பட்ட படுக்கை வசதி கொண்ட இம்மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் என ஏராளமானோர் பணிபுரிந்து வரும் நிலையில், மருத்துவமனையில் பணிபுரியும் முன்களப்பணியாளர்கள் அவ்வப்போது நோய்த்தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.
 போராட்டம்
இந்தநிலையில் மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து பெண் ஒருவர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். 
இதைதொடர்ந்து உயிரிழந்த ஒப்பந்த பணியாளருக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி சக தூய்மைப்பணியாளர்கள் சிறிது நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு மருத்துவமனை வளாகம் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story