மராட்டியத்தில் கொரோனா குறைந்து வருவதால் தளர்வுகள்; கடைகள் திறப்பு நேரம் அதிகரிப்பு; முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு


மராட்டியத்தில் கொரோனா குறைந்து வருவதால் தளர்வுகள்; கடைகள் திறப்பு நேரம் அதிகரிப்பு; முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு
x
தினத்தந்தி 31 May 2021 10:20 AM GMT (Updated: 31 May 2021 10:20 AM GMT)

மராட்டியத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். இதன்படி கடைகள் திறப்பு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மராட்டியத்தில் 2-வது கொரோனா அலை கடந்த மாதம் உச்சத்தை தொட்டது.

கொரோனா பாதிப்பு குறைகிறது
மராட்டியத்தில் தினந்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்த கடந்த 14-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் ஊரடங்கு போன்ற கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மே மாதம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது. தற்போது தினசரி பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளது. தற்போது மாநிலத்தில் அமலில் உள்ள கட்டுப்பாடுகள் நாளையுடன் (1-ந் தேதி) முடிவடைகிறது.

ஜூன் 15 வரை நீட்டிப்பு
இந்தநிலையில் நேற்று இரவு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பொது மக்களிடம் ஆன்லைன் மூலமாக உரையாற்றினார். அப்போது அவர் மாநிலத்தில் வருகிற ஜூன் 15-ந் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக கூறினார். மேலும் தளர்வுகளையும் அறிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-

மாநிலத்தில் கட்டுப்பாடுகள் ஜூன் 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு்ளது. சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாநில அரசின் முடிவுக்கு எதிராக யாரும் போராட்டத்தில் ஈடுபடவேண்டாம். அரசு கட்டுப்பாடுகளை விலக்கும். ஆனால் தொற்று தற்போதும் உள்ளது. எனவே அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவிக்கும். 3-வது கொரோனா அலை அபாயம் உள்ள நிலையில் ஒரே நேரத்தில் கட்டுப்பாடுகளை நீக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

2 மணி வரை கடைகளை திறக்கலாம்

இந்தநிலையில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டது தொடர்பான அரசு உத்தரவு வெளியானது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தற்போது அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் (பால், மளிகை, காய்கறி உள்ளிட்ட கடைகள்) காலை 7 மணி முதல் 11 மணி வரை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இனிமேல் அவை காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்து வைக்கலாம். ஷாப்பிங் மையங்கள், வணிக வளாகங்கள் போன்றவற்றில் இல்லாத, தனியாக உள்ள அத்தியாவசியம் அல்லாத கடைகளை திறப்பது குறித்து உள்ளூர் பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்து கொள்ளலாம். ஆனால் அந்த கடைகளும் மதியம் 2 மணிக்கு மேல் திறக்க அனுமதி கிடையாது. மேலும் சனி, ஞாயிறு போன்ற வார இறுதிநாட்களிலும் திறக்கப்பட கூடாது.

இ-வணிக நிறுவனங்களுக்கு அனுமதி

இ-வணிக நிறுவனங்கள் அத்தியாவசியம் இல்லாத பொருட்களை டெலிவிரி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் மதியம் 3 மணிக்கு மேல் மருத்துவம், வீட்டு டெலிவிரி உள்ளிட்ட அத்தியாவசியம் இல்லாத வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் நோய் பாதிப்பு சதவீதம் 20-க்கு மேல் உள்ள பகுதிகள், ஆக்சிஜன் படுக்கைகள் 75 சதவீதம் நிரம்பிய பகுதிகளில் ஏற்கனவே இருந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். மேலும் அந்த மாவட்ட எல்லைகள் ‘சீல்’ வைக்கப்படும். மாநிலத்தில் சரக்கு வாகனங்கள் செல்ல எந்த தடையும் கிடையாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story