ஆசனூர் அருகே சாலையோரத்தில் கூட்டம் கூட்டமாக உலா வரும் மான்கள்


ஆசனூர் அருகே சாலையோரத்தில் கூட்டம் கூட்டமாக உலா வரும் மான்கள்
x
தினத்தந்தி 31 May 2021 8:47 PM GMT (Updated: 31 May 2021 8:47 PM GMT)

ஆசனூர் அருகே சாலையோரத்தில் மான்கள் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன.

தாளவாடி
ஆசனூர் அருகே சாலையோரத்தில் மான்கள் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன.
பசுமையாக...
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், ஜீர்கள்ளி, தலமலை, கேர்மாளம், கடம்பூர், டி.என்.பாளையம், விளாமுண்டி என மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
கோடை காலத்தில் வனப்பகுதி கடும் வறட்சியாக காணப்பட்டது. தற்போது தாளவாடி மலைப்பகுதியில் நல்ல மழை பெய்தது. இதனால் புற்கள், செடி, கொடிகள் முளைத்து பசுமையாக காணப்படுகிறது. மேலும் மரங்கள் துளிர் விட்டு பசுமையாக காட்சி அளிக்கிறது. 
ஊரடங்கு
மேலும் இங்குள்ள ஆசனூர் வனப்பகுதி வழியாக திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதனால் தினமும் இந்த நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.  தற்போது தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் செல்ல இந்த தேசிய நெடுஞ்சாலையில் அனுமதி இல்லை. 
மான்கள் கூட்டம்
இதன்காரணமாக இந்த சாலையில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்படுகிறது.  வாகன போக்குவரத்து குறைந்துவிட்டதாலும், வனப்பகுதி பசுமையாக காட்சி அளிப்பதாலும் ஆசனூர் அருகே உள்ள இந்த தேசிய நெடுஞ்சாலையோரம் மான்கள் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன. அவ்வாறு வரும் மான்கள் சாலையோரம் முளைத்து உள்ள புற்களை தின்றபடி செல்கின்றன.
இந்த காட்சிகளை அந்த பகுதி வழியாக தங்களுடைய வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் செல்போனில் படம் எடுத்து சென்றனர். சாலையோரம் மான்கள் உலா வருவதால் வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். 

Next Story