ஈரோடு மாவட்டத்தில் பெண் உள்பட 8 பேர் கொரோனாவுக்கு பலி; புதிதாக 1,742 பேருக்கு தொற்று


ஈரோடு மாவட்டத்தில் பெண் உள்பட 8 பேர் கொரோனாவுக்கு பலி; புதிதாக 1,742 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 31 May 2021 9:06 PM GMT (Updated: 31 May 2021 9:06 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் பெண் உள்பட 8 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். மேலும் புதிதாக 1,742 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் பெண் உள்பட 8 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். மேலும் புதிதாக 1,742 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
1,742 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. வைரசை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை.
இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் புதிதாக மேலும் 1,742 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இவர்களில் சிலர் வீட்டு தனிமையிலும், சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகவும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 56 ஆயிரத்து 644 ஆக உயர்ந்தது.
8 பேர் கொரோனாவுக்கு பலி
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பலி எண்ணிக்கை அதிகமாக இருந்து வந்த நிலையில் நேற்று சற்று குறைந்துள்ளது. சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் 8 பேர் இறந்துள்ளனர். அதன்படி கொரோனாவுக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது ஆண் கடந்த மாதம் 9-ந்தேதியும், 74 வயது முதியவர் 18-ந்தேதியும், 64 வயது முதியவர் 20-ந்தேதியும் இறந்தனர்.
மேலும் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த 58 வயது ஆண் கடந்த 27-ந்தேதியும், 65 வயது பெண் 29-ம் தேதியும், 70 வயது முதியவர், 53 வயது ஆண் மற்றும் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 43 வயது ஆண் ஆகியோர் நேற்று முன்தினமும் இறந்தனர். இதனால் ஈரோடு மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 348 ஆக உயர்ந்துள்ளது. 
15,888 பேர் சிகிச்சை
அதேநேரம் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 1,041 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 40 ஆயிரத்து 408 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.
இதேபோல் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று உள்ள 15 ஆயிரத்து 888 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story