ஈரோட்டில் தீவிர வாகன சோதனை: தேவை இல்லாமல் சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை; போலீசார் நடவடிக்கை


ஈரோட்டில் தீவிர வாகன சோதனை: தேவை இல்லாமல் சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை; போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 31 May 2021 9:11 PM GMT (Updated: 31 May 2021 9:11 PM GMT)

ஈரோட்டில் ஊரடங்கு நேரத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் தேவை இல்லாமல் சுற்றுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து நடவடிக்கை எடுத்தனர்.

ஈரோடு
ஈரோட்டில் ஊரடங்கு நேரத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் தேவை இல்லாமல் சுற்றுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து நடவடிக்கை எடுத்தனர்.
சோதனை மையங்கள்
கொரோனா பாதிப்பில் ஈரோடு மாவட்டம் முன்னணியில் உள்ளது. தினசரி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரோனா ஊரடங்கு போடப்பட்டு இருந்தாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வாகன போக்குவரத்து அதிக அளவில் இருந்தது.
பல்வேறு இடங்களில் சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தாலும் ஏதேனும் ஒரு வழியில் சாலையில் வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. எனவே அத்தியாவசிய தேவை இன்றி சுற்றித்திரிபவர்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.
கொரோனா பரிசோதனை
நேற்று காளைமாட்டு சிலை அருகே போலீசார் வாகன சோதனை நடத்திய போது தேவையின்றி சுற்றிய பலரும் பிடிபட்டனர். வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏராளமான வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டன. பி.பி.அக்ரஹாரம், கருங்கல்பாளையம், மூலப்பட்டறை பகுதிகளிலும் சோதனை நடந்தது.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அவசியமின்றி சுற்றி பிடிபட்டவர்களை கொரோனா பரிசோதனை செய்வதற்காக ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர். இந்த நடவடிக்கையால் பலரும் தெரியாமல் வந்துவிட்டேன் மன்னித்து விடுங்கள் என்று போலீசாரிடம் கெஞ்சினார்கள்.
இதுபற்றி போலீஸ் ஒருவர் கூறும்போது, “கொரோனா பாதிப்பு இருக்கும் பலரும், சோதனை கூட செய்யாமல் சாலைகளில் சுற்றி வருகிறார்கள். அவர்களால் மற்றவர்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. எனவே அவசியமின்றி வரும் அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்ய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்” என்றார்.

Next Story