குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறக்க வேண்டும் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறக்க வேண்டும் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 Jun 2021 5:59 PM GMT (Updated: 1 Jun 2021 5:59 PM GMT)

குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறக்க வேண்டும் என ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

திருவாரூர்,

திருவாரூரில் கொரோனா தடுப்பு முன்களப்பணியில் ஈடுபட்டுள்ள நகராட்சி ஊழியர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருட்கள் நேற்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஆர்.காமராஜ் தலைமை தாங்கி முன்கள பணியாளர்களுக்கு வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா பரவலை தடுத்திடவும், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு உதவிகள் செய்திட வேண்டும் என கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில் இந்த பணிகளை மேற்கொண்டுள்ளோம். எங்களைப் பொருத்தவரை முதல் அலை வீசியபோது ஆட்சியாளர்களாக இருந்து மக்களை காப்பாற்றி இருக்கிறோம். தேர்தல் அறிவிப்பிற்கு பிறகு இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. தற்போது இரண்டாவது அலையால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை குறைப்பதற்கு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனையை அதிகப்படுத்த வேண்டும். முக கவசம் அணிதல், கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட விழிப்புணர்வு பிரசாரங்களை அதிகரிக்க வேண்டும்.

கொரோனா பாதுகாப்பு மையங்கள்

அதே போல மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களை வீட்டிலேயே இருந்து ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்கும் ஏழை, எளிய மக்கள் சிறிய வீடுகளில் வசித்து வருகிறார்கள். தொற்று ஏற்பட்டவர்கள் தங்கள் வீடுகளில் தங்கி ஓய்வெடுக்கும்போது அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் இந்த தொற்று பரவ வாய்ப்பு இருக்கிறது. அதனால் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதுகாப்பு மையங்களை அதிகப்படுத்தி உரிய சிகிச்சை அளித்திட வேண்டும்.

உறவினர்களை அனுமதிக்கக்கூடாது

அதேபோல் கொரோனா பாதுகாப்பு மையம், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தங்கியுள்ள கொரோனா உள்நோயாளிகளை அவர்களது உறவினர்கள் உடன் இருந்து கவனித்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதனால் கொரோனா நோய்த்தொற்று கூடுதலாக பரவுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே நோயாளிகளோடு உறவினர்கள் தங்குவதற்கு அனுமதிக்கக்கூடாது.

மேட்டூர் அணையை திறக்க வேண்டும்

ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். தற்போது அணையில் 97 அடி தண்ணீர் உள்ளது. எனவே குறுவை சாகுபடி தொடங்குவதற்கு ஏதுவாக ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும்.

கர்நாடகாவில் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை கேட்டுப் பெற வேண்டும். தென்மேற்கு பருவமழை ஜூன் மூன்றாம் தேதி தொடங்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதால் தண்ணீர் கிடைப்பதில் சிரமம் இருக்காது. எனவே இவைகளை கருத்தில் கொண்டு மேட்டூர் அணை திறப்பை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். முன்கூட்டி அறிவித்தால் தான் விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான முன்னேற்பாடுகளை செய்வதற்கு வாய்ப்பாக அமையும். டெல்டா மக்களின் சார்பாக இந்த கோரிக்கையினை அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வாசுகிராமன், மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள், நகர செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், செந்தில், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சின்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story