திம்பம் மலைப்பகுதியில் காய்கறி வாகனங்களை எதிர் நோக்கி காத்திருக்கும் குரங்குகள்


திம்பம் மலைப்பகுதியில் காய்கறி வாகனங்களை எதிர் நோக்கி காத்திருக்கும் குரங்குகள்
x
தினத்தந்தி 1 Jun 2021 8:29 PM GMT (Updated: 1 Jun 2021 8:29 PM GMT)

காய்கறி வாகனங்களை எதிர் நோக்கி காத்திருக்கும் குரங்குகள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, ஜீர்கள்ளி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், கடம்பூர், டி.என்.பாளையம், சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமுண்டி என மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. 
இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் சிறுத்தை, புலி, யானை, மான், காட்டுப்பன்றிகள் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் ஏராளமான குரங்குகளும் உள்ளன.  கோடை காலத்தில் ஏற்பட்ட வறட்சி காரணமாக வனப்பகுதிக்குள் செடி, கொடிகள் கருகின. மரங்கள் காய்ந்தன. இதனால் குரங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் திம்பம் மலைப்பாதை வழியாக காய்கறி ஏற்றி சென்ற வாகன ஓட்டிகள் தாங்கள் ஏற்றி வந்த காய்கறி மற்றும் பழங்களை ரோட்டோரம் வீசி சென்றனர். இவைகளை தின்பதற்காக குரங்குகள் கூட்டமாக திம்பம் மலைப்பாதைக்கு வந்தன.  தற்போது  வனப்பகுதியில் நல்ல மழை பெய்து உள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் துளிர் விட்டு பசுமையாக காட்சி அளிக்கிறது. 
ஆனாலும் குரங்குகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் அங்குள்ள திம்பம் மலைப்பாதையின் சாலையோரம் உட்கார்ந்து கொண்டு அந்த வழியாக காய்கறி ஏற்றி செல்லும் வாகனங்களை எதிர் நோக்கி காத்திருக்கின்றன.

Next Story