2-ம் கட்ட நிவாரணம் ரூ.2 ஆயிரம் வினியோகம் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கிய ரேஷன்கடை ஊழியர்கள்


2-ம் கட்ட நிவாரணம் ரூ.2 ஆயிரம் வினியோகம் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கிய ரேஷன்கடை ஊழியர்கள்
x
தினத்தந்தி 2 Jun 2021 8:38 PM GMT (Updated: 2 Jun 2021 8:38 PM GMT)

2-ம் கட்டமாக ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்குவதற்காக ரேஷன்கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகம் செய்தனர்.

தமிழகத்தில் அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் 2 தவணையாக வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில் முதல்கட்டமாக கடந்த மாதம் ரேஷன் கடைகளில் தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்தநிலையில் 2-வது கட்டமாக வழங்கப்பட வேண்டிய ரூ.2 ஆயிரத்துக்கான நிவாரண தொகை மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவற்றை வினியோகம் செய்யும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வைக்க உள்ளார்.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,152 ரேஷன் கடைகளில் உள்ள 7 லட்சத்து 13 ஆயிரத்து 190 ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2-ம் கட்ட நிவாரண தொகை மற்றும் 14 வகையான பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதையொட்டி பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யும் பணி நேற்று நடந்தது.
டோக்கன் வினியோகம்
ரேஷன் கடைக்காரர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன்களை வினியோகம் செய்தனர். அதில் எந்த தேதியில், எந்த நேரம் கடைக்கு வந்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், கொரோனா பாதிப்பு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் உள்ளிட்ட காரணங்களால் முதல்கட்டமாக வழங்கப்பட்ட நிவாரண தொகை பெறாதவர்களுக்கு இந்த மாதம் வழங்கப்பட உள்ளது. தினமும் ஒரு கடையில் 200 பேருக்கு பொருட்கள் வழங்கும் வகையில் பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே ரேஷன் கடைகளில் வழக்கமாக வழங்கப்படும் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. எனவே அங்கு பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்கி செல்கிறார்கள். ஈரோடு சூளை பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் நேற்று பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்கினார்கள்.

Next Story