கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூத்தாநல்லூர் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை தீவிரம் நகராட்சி ஆணையர் தகவல்


கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூத்தாநல்லூர் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை தீவிரம் நகராட்சி ஆணையர் தகவல்
x
தினத்தந்தி 3 Jun 2021 5:42 PM GMT (Updated: 3 Jun 2021 5:42 PM GMT)

கொேரானா பரவலை கட்டுப்படுத்த கூத்தாநல்லூர் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று நகராட்சி ஆணையர் லதா கூறினார்.

கூத்தாநல்லூர்,

கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

கூத்தாநல்லூரில் நகராட்சி ஆணையர் லதா தலைமையிலான அலுவலர்கள் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி நகர பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல், முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தல், ஊரடங்கை மீறி நிறுவனங்கள் செயல்பட்டால் பூட்டி சீல் வைத்தல் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் கூத்தாநல்லூரில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 224 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கையும் 7ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா விழிப்புணர்வு ஓவியம்

இதையடுத்து கூத்தாநல்லூர் பகுதிகளில் நகராட்சி அலுவலர்கள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கூத்தாநல்லூர் பாய்க்காரத்தெரு பாலம் அருகேயும், லெட்சுமாங்குடி நான்கு வழி சாலையிலும், நகராட்சி அலுவலகம் அருகிலும் சாலையில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது. இந்த ஓவியத்தை நகராட்சி ஆணையர் லதா பார்வையிட்டார். பின்னர் சுகாதார ஆய்வாளர் அருண்குமார், சுகாதார மேற்பார்வையாளர் வாசுதேவன் மற்றும் அலுவலர்கள் நகர பகுதிகளில் ஆய்வு பணிகளில் ஈடுபட்டனர்.

சுகாதார பணிகள் தீவிரம்

இதுகுறித்து நகராட்சி ஆணையர் லதா கூறுகையில்,

கூத்தாநல்லூர் நகராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் அனைத்து சுகாதார பணிகளும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நகர பகுதிகளில் தீவிர ஆய்வு பணிகள் இடைவிடாமல் நடைபெற்று வருகிறது. நகர பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் தினமும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கூத்தாநல்லூர் பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படுகிறது என்றார்.

Next Story