திருத்தணி அருகே மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த ரூ.20 லட்சம் கஞ்சா பறிமுதல் வாலிபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


திருத்தணி அருகே மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த ரூ.20 லட்சம் கஞ்சா பறிமுதல் வாலிபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Jun 2021 1:27 AM GMT (Updated: 7 Jun 2021 1:27 AM GMT)

திருத்தணி அருகே மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த ரூ.20 லட்சம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பள்ளிப்பட்டு,

திருத்தணியில் ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மாவட்ட எல்லையில் வள்ளிமாபுரம் என்ற பகுதியில் போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு காரணமாக ராணிப்பேட்டையில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வரும் வாகனங்களை திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் அவர்களின் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் போலீசாரை கண்டதும் அதே இடத்தில் வாகனத்தை போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். போலீசார் அந்த வாகனத்தை சோதனை செய்த போது, ஒரு கோணிப்பையில் 6 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

வாலிபர்களுக்கு வலைவீச்சு

சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை திருத்தணி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்த வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

போலீசார் பறிமுதல் செய்த வாகனத்தில் இருந்த பதிவுச்சான்றிதழில் சென்னை அயனாவரம் மாயக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான வாகனம் என உள்ளது. ஆனால் இந்த வண்டியில் இருந்த மற்றொரு ஆதார் நகலில் ஆந்திர மாநிலம் திருப்பதி மங்கலம் என்ற பெயரில் முகவரி உள்ளது. இதுகுறித்து போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருத்தணியில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 6 கிலோ கஞ்சா பிடிப்பது இதுவே முதல் முறை என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.

Next Story