கொடுங்கையூரில் தி.மு.க. நிர்வாகியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


கொடுங்கையூரில் தி.மு.க. நிர்வாகியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 9 Jun 2021 1:22 AM GMT (Updated: 9 Jun 2021 1:22 AM GMT)

கொடுங்கையூரில் பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடாததால் மனமுடைந்த தி.மு.க. நிர்வாகியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பூர்,

கொடுங்கையூர் அடுத்த எருக்கஞ்சேரி மேற்கு இந்திரா நகரை சேர்ந்தவர் தமிழன் பிரசன்னா (வயது 43). இவர் தி.மு.க. கட்சியின் மாநில செய்தி தொடர்பு இணை செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி நதியா (35). இந்த தம்பதிக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆன நிலையில், இவர்களுக்கு ஏஞ்சல் பாரதி, ஜெனிபர் பாரதி ஆகிய 2 மகளும், தமிழ் நிரன் என்ற 1 வயது மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் நதியாவுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டும் என்று கணவர் பிரசன்னாவிடம் தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் பிறந்த நாள் கொண்டாட்டத்தை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட வேண்டும் எனவும் அவர் கூறியதாக தெரிகிறது.

அதற்கு தமிழன் பிரசன்னா தான் கட்சி பொறுப்பில் இருப்பதால், ஊரடங்கு நேரத்தில் ஆடம்பர பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு மனைவியிடம் கூறியதாக தெரிகிறது.

தூக்கிட்டு தற்கொலை

இதனால் மனமுடைந்து காணப்பட்ட நதியா நேற்று காலை கணவர் குளியல் அறைக்கு சென்ற நிலையில், படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தனது புடவையால் தூக்கிட்டுள்ளார்.

இந்த நிலையில் குளியல் அறையில் இருந்து வெளியே வந்ததும், நதியா தூக்கில் தொங்கி துடிதுடிப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிரசன்னா அவரை மீட்டு, காரில் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

அப்போது அங்கு நதியாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story