ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்களில் வாழைத்தார்கள் ஏலம் கலெக்டர் சி.கதிரவன் தகவல்


ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்களில் வாழைத்தார்கள் ஏலம் கலெக்டர் சி.கதிரவன் தகவல்
x
தினத்தந்தி 9 Jun 2021 8:31 PM GMT (Updated: 9 Jun 2021 8:31 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்களில் வாழைத்தார்கள் ஏலம் நடைபெற உள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்களில் வாழைத்தார்கள் ஏலம் நடைபெற உள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
வாழைத்தார்கள் ஏலம்
ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில், விவசாயிகளால் விளைவிக்கப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ள வாழைத்தார்களை விற்பனை செய்யும் பொருட்டு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் அந்தியூர் புதுப்பாளையம், சத்தியமங்கலம் மற்றும் கோபிசெட்டிபாளையம் ஆகிய 3 இடங்களில் ஏல மையங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் புதுப்பாளையம், சத்தியமங்கலம் மற்றும் கோபிசெட்டிபாளையம் ஆகிய இடங்களில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களின் வாழைத்தார் ஏல மையங்களில் விவசாயிகள் தங்களது வாழைத்தார்களை விற்பனை செய்ய ஏதுவாக இந்த ஏல மையங்கள் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்பதிவு
அந்தியூர் புதுப்பாளையத்தில் உள்ள மையத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும், சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வருகிற 19-ந்தேதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் வாழைத்தார்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும். இந்த வாய்ப்பினை அந்தந்த பகுதி விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும் விவசாயிகள் தங்கள் வாழைத்தார்களை விற்பனைக்கு கொண்டு வரும் விவரத்தினை, 99427 12144 (அந்தியூர் புதுப்பாளையம்), 94424 38188 (சத்தியமங்கலம்), 99762 53949 (கோபிசெட்டிபாளையம்) ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொண்டு ஒரு நாள் முன்னதாக பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் கொரோனா தொற்றினை தடுக்கும் விதமாக அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், மேலும் கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

Next Story