மொடக்குறிச்சி அருகே பாறைக்குழிக்குள் குப்பைகளை கொட்டிய லாரிகள் சிறைபிடிப்பு


மொடக்குறிச்சி அருகே பாறைக்குழிக்குள் குப்பைகளை கொட்டிய லாரிகள் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 10 Jun 2021 7:59 PM GMT (Updated: 10 Jun 2021 7:59 PM GMT)

மொடக்குறிச்சி அருகே பாறைக்குழிக்குள் குப்பைகளை கொட்டிய லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தார்கள்.

மொடக்குறிச்சி அருகே பாறைக்குழிக்குள் குப்பைகளை கொட்டிய லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தார்கள். 
சிறைபிடிப்பு
மொடக்குறிச்சி அடுத்த சின்னியம்பாளையத்தில் ராஜேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்குள்ள பாறைகளை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அகற்றினார்கள். அப்போது அதில் பெரிய பாறைக்குழி ஏற்பட்டது.
இந்த குழியை நிரப்ப ராஜேஸ்வரன் ஈரோடு நகராட்சிக்கு சொந்தமான குப்பைகளை டிப்பர் லாரிகளில் கொண்டுவந்து கொட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மாலை 7 டிப்பர் லாரிகளில் குப்பைகளை கொண்டு வந்து குழியில் கொட்டிக்கொண்டு இருந்தார்கள்.
அப்போது சின்னியம்பாளையம் பொதுமக்கள் குழிக்குள் குப்பைகளை கொண்டுவந்து போடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்று கூறி லாரிகளையும், வேலைக்கு பயன்படுத்திய பொக்லைன் எந்திரத்தையும் சிறைபிடித்தார்கள். 
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், சிவசங்கர், மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் அதிகாரிகளிடம், ‘குழிக்குள் தொடர்ச்சியாக குப்பைகளை கொட்டினால் சுகாதார சீர்கேடு ஏற்படும். அதனால் குப்பைகளை அகற்றவேண்டும். இல்லை என்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம்’ என்றார்கள். இதையடுத்து அதிகாரிகள் பொதுமக்களிடம், ‘இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்.டி.ஓ. இங்கு வந்து நேரில் ஆய்வு செய்வார். பின்னர் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்கள். அதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் கலைந்து சென்றார்கள். 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story