சென்னிமலையில் வங்கி அதிகாரி மனைவி தற்கொலை செய்தது ஏன்?- செல்போன் உரையாடலில் பரபரப்பு தகவல்


சென்னிமலையில் வங்கி அதிகாரி மனைவி தற்கொலை செய்தது ஏன்?- செல்போன் உரையாடலில் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 11 Jun 2021 10:26 PM GMT (Updated: 11 Jun 2021 10:26 PM GMT)

சென்னிமலையில் வங்கி அதிகாரி மனைவி தற்கொலை செய்து ெகாண்டது ஏன்? என்பது குறித்து செல்போன் உரையாடலில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

சென்னிமலை
சென்னிமலையில் வங்கி அதிகாரி மனைவி தற்கொலை செய்து ெகாண்டது ஏன்? என்பது குறித்து செல்போன் உரையாடலில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தற்கொலை
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 30). அவருடைய மனைவி கீர்த்தனா (24). இவர்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. அரவிந்தன் ஈரோட்டில் உள்ள ஒரு அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.
இதனால் அரவிந்தனும், கீர்த்தனாவும் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கீர்த்தனா கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆர்.டி.ஓ. விசாரணை
இதுபற்றி அறிந்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அரவிந்தனுக்கும், கீர்த்தனாவுக்கும் திருமணம் நடந்து 15 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் நேற்று பெருந்துறை ஐ.ஆர்.டி.டி மருத்துவமனையில் இருவரது பெற்றோர்களிடமும் சுமார் 2½ மணி நேரம் விசாரணை நடத்தினார்.
பரபரப்பு தகவல்
அப்போது கீர்த்தனாவின் கணவர் அரவிந்தன் வைத்திருந்த செல்போனை  ஆர்.டி.ஓ. சைபுதீன் ஆய்வு செய்தார். அதில் இருவரது பெற்றோர்கள் மற்றும் அரவிந்தன் பேசிய பரபரப்பான உரையாடல்கள் பதிவாகி இருந்தது.  கீர்த்தனாவின் பெற்றோர் அவரிடம், ‘உன்னோட கணவரிடம் நீ வாழ முடியாது. அதனால் திருவாரூரில் உள்ள நமது வீட்டுக்கு நீ வந்துவிடு’ என பேசி உள்ளனர்.
அதேபோல் அரவிந்தனின் பெற்றோர் கீர்த்தனாவிடம், ‘நீ எங்களை விட்டு உன் பெற்றோர் வீட்டுக்கு செல்ல வேண்டாம்’ என கூறியுள்ளனர். இதுதவிர அரவிந்தன் பேசிய மற்றொரு உரையாடலில், ‘நீ (கீர்த்தனா) உன் பெற்றோரின் வீட்டுக்கு சென்றால் நான் தற்கொலை செய்து விடுவேன்’ என பேசியுள்ளார்.
 தகராறு
இவ்வாறு 2 பேரின் பெற்றோர்களும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி கீர்த்தனாவிடம் பேசியது செல்போன் உரையாடலில் பதிவாகி இருந்தது. மேலும் இருவரின் பெற்றோர்களும் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டதாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்த கீர்த்தனா தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணைக்காக இன்று (சனிக்கிழமை) மாலை 3 மணி அளவில் ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு வருமாறு இருதரப்பு பெற்றோருக்கும் ஆர்.டி.ஓ. மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பெருந்துறை ஐ.ஆர்.டி.டி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கீர்த்தனாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்றுக்கொண்ட அவர்கள் அடக்கம் செய்வதற்காக திருவாரூருக்கு கொண்டு சென்றனர்.

Next Story