ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 11 பேர் பலி- புதிதாக 1,365 பேருக்கு தொற்று உறுதி


ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 11 பேர் பலி- புதிதாக 1,365 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 11 Jun 2021 10:26 PM GMT (Updated: 11 Jun 2021 10:26 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 1,365 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 1,365 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது.
1,365 பேருக்கு கொரோனா
கொரோனா 2-வது அலை பாதிப்பு ஈரோடு மாவட்டத்தில் மெதுவாக குறைய தொடங்கி இருக்கிறது. புதிதாக 1,300-க்கும் மேற்பட்டவர்கள் தினமும் பாதிக்கப்பட்டு வந்தாலும் சிகிச்சையில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினமும் சுமார் 2 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வருவதால் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை சிகிச்சையில் இருந்தவர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக 16 ஆயிரத்தை தாண்டியது. தற்போது அந்த எண்ணிக்கை 13 ஆயிரத்தைவிட குறைந்து உள்ளது.
இந்தநிலையில் மாநில சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 1,365 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 73 ஆயிரத்து 612 ஆக உயர்ந்தது. இதில் 60 ஆயிரத்து 606 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். நேற்று மட்டும் 1,921 பேர் குணமடைந்தனர். தற்போது 12 ஆயிரத்து 520 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
11 பேர் பலி
இதற்கிடையே கொரோனாவுக்கு மேலும் 11 பேர் பலியாகி உள்ளார்கள். இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 62 வயது முதியவர் கடந்த மாதம் 31-ந் தேதியும், 40 வயது ஆண், 57 வயது ஆண் ஆகியோர் கடந்த 5-ந் தேதியும், 49 வயது ஆண், 75 வயது மூதாட்டி ஆகியோர் 6-ந் தேதியும், 39 வயது ஆண், 70 வயது மூதாட்டி ஆகியோர் 7-ந் தேதியும், 55 வயது பெண், 70 வயது முதியவர் ஆகியோர் 9-ந் தேதியும், 64 வயது மூதாட்டி, 72 வயது முதியவர் ஆகியோர் நேற்றும் கொரோனா தொற்றுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 486 ஆக உயர்ந்தது.

Next Story