முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் சென்னை கலெக்டர் அறிவிப்பு


முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் சென்னை கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Jun 2021 5:13 AM GMT (Updated: 12 Jun 2021 5:13 AM GMT)

சென்னை கலெக்டர் ஆர்.சீதாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது.

சென்னை,

தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று முதல்-அமைச்சரால் 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் வழங்கப்பட உள்ளது. சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு ரூ.50 ஆயிரம் ரொக்கம், பாராட்டுப்பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கிய ‘முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது’க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதற்கு 15 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். அதற்கான சான்றும் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு, மதிப்பு இந்த விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story