கடன் தொல்லையால் விரக்தி செம்பரம்பாக்கம் ஏரியில் குதித்து இளம்பெண் தற்கொலை


கடன் தொல்லையால் விரக்தி செம்பரம்பாக்கம் ஏரியில் குதித்து இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 13 Jun 2021 6:52 AM GMT (Updated: 13 Jun 2021 6:52 AM GMT)

கடன் தொல்லையால் விரக்தி அடைந்த இளம்பெண், செம்பரம்பாக்கம் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பூந்தமல்லி, 

செம்பரம்பாக்கம் ஏரியின் 2-வது மதகு அருகே இளம்பெண் ஒருவர் பிணமாக மிதப்பதாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ஏரியில் கிடந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்து கிடந்த பெண் யார்? என்பது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி சகாய பரத் விசாரணை மேற்கொண்டார்.

அதில் பிணமாக கிடந்த இளம்பெண், மதுரவாயல் அடுத்த வானகரம், ஜெயராம் நகர் பகுதியைச் சேர்ந்த ராதா (வயது 33) என்பது தெரிந்தது. இவர், ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். அத்துடன் சொந்தமாக வீடும் கட்டி வந்தார். இதற்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

தற்போது ஊரடங்கு என்பதால் சரியான பணப்புழக்கம் இல்லாமல் இவரிடம் சீட்டு போட்டவர்களுக்கு பணத்தை கொடுக்க முடியாமலும், வீட்டையும் தொடர்ந்து கட்ட முடியாமலும் இருந்ததுடன், கடன் தொல்லையாலும் பரிதவித்து வந்ததாக தெரிகிறது.

இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் விரக்தி அடைந்த ராதா, தனது தாய் வீட்டுக்கு சென்று வருவதாக கணவரிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர், செம்பரம்பாக்கம் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story