திருவாரூர் மாவட்ட பகுதிகளில் மதுக்கடைகள் திறப்பதை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


திருவாரூர் மாவட்ட பகுதிகளில் மதுக்கடைகள் திறப்பதை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Jun 2021 10:25 AM GMT (Updated: 14 Jun 2021 10:25 AM GMT)

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் மதுக்கடைகள் திறப்பதை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரடாச்சேரி,

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதித்து உள்ளது. இதனை கண்டித்தும், மதுக் கடைகளை திறக்க கூடாது என வலியுறுத்தியும் பா.ஜனதா கட்சி சார்பில் கொரடாச்சேரி ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்புக் கொடி மற்றும் மதுக்கடை எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷம் எழுப்பினர்.

கொரடாச்சேரி

கொரடாச்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா மாநில விவசாய அணி செயலாளர் கோவி.சந்துரு தலைமை தாங்கினார். வடக்கு மாங்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கொரடாச்சேரி வடக்கு ஒன்றிய தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். அபிவிருத்தீஸ்வரத்தில் ஒன்றிய துணைத்தலைவர் ஜெகதீசன் தலைமையிலும், கமலாபுரத்தில் ஒன்றிய துணைத்தலைவர் தமிழ்வாணன் தலைமையிலும், திருப்பணிபேட்டையில் தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் முருகேசன் தலைமையிலும், கிளரியத்தில் பட்டியல் அணி மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் கொரடாச்சேரி ஒன்றிய பகுதிகளில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குளிக்கரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.

காவனூரில் செயற்குழு உறுப்பினர் முரளி தலைமையிலும், கருப்பூரில் செயற்குழு உறுப்பினர் ஆசாத் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருத்துறைப்பூண்டி

மதுக்கடைகளை திறப்பதை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் பா.ஜனதா கட்சியினர் மாவட்ட பொருளாளர் சிவகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல திருத்துறைப்பூண்டி நகரம் மற்றும் ஒன்றியத்தில் உள்ள பொறுப்பாளர்கள் தங்கள் வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோட்டூர்

கோட்டூர் வட்டாரத்தில் பா.ஜனதா சார்பில் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்டூரில் மாவட்ட தலைவர் ராகவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ பிரிவு தலைவர் வினோத்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர் அருள்குமரன், ஒன்றிய செயலாளர் கணேஷ், ஒன்றிய துணைத்தலைவர் மணி, நிர்வாகி அறிவழகன் மற்றும் பலர் கலந்து கொண்டு கொரோனா பரவும் சூழலில் மதுக்கடைகளை திறக்க கூடாது என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மன்னார்குடி

டாஸ்மாக் அரசு மதுக்கடைகளை ஊரடங்கு காலத்தில் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா கட்சியினர் மன்னார்குடியில் மாவட்ட பொதுச்செயலாளர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் அவருடைய வீடு முன்பு நடந்தது. அதேபோல மாவட்ட இளைஞரணி தலைவர் அறிவுராம் தலைமையில் மன்னார்குடியை அடுத்த அரிச்சபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கிளை தலைவர் சுரேஷ், மாவட்ட செயற்குழுஉறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Next Story