தர்மபுரி மாவட்டத்தில், 2-ம் தவணையாக 4½ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 நிவாரணத்தொகை இன்று முதல் வழங்கப்படுகிறது


தர்மபுரி மாவட்டத்தில், 2-ம் தவணையாக 4½ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 நிவாரணத்தொகை இன்று முதல் வழங்கப்படுகிறது
x
தினத்தந்தி 14 Jun 2021 5:29 PM GMT (Updated: 14 Jun 2021 5:32 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில், 2-ம் தவணையாக 4½ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 நிவாரணத்தொகை இன்று முதல் வழங்கப்படுகிறது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 4½ லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகையின் 2-ம் தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வழங்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நிவாரணத்தொகை

கொரோனா பரவலால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கும் வகையில் முதல்-அமைச்சர் அறிவித்தபடி பொதுவினியோக திட்ட அரிசி பெறும் மின்னனு குடும்பஅட்டை வைத்துள்ள அனைத்து குடும்பஅட்டைதாரர்களுக்கும் 2-ம் தவணையாக ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகை மற்றும் 14 வகையான கொரோனா சிறப்பு நிவாரண மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதன்படி ஜூன் 15-ந்தேதி (இன்று) முதல் அந்தந்த ரேஷன் கடைகளில் டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் வழங்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகள் மூலமாக தர்மபுரி மாவட்டத்தில் புழக்கத்தில் உள்ள அரிசிபெறும் 4 லட்சத்து 46 ஆயிரத்து 788 (இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் குடும்பங்கள் உள்பட) மின்னனு குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது.தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து அரிசிபெறும் மின்னணு குடும்பஅட்டைதாரர்கள் அனைவருக்கும் விடுபடுதலின்றி கொரோனா நிவாரணத் தொகை 2- ம் தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான கொரோனா சிறப்பு நிவாரண மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு தெருவாரியாக உள்ள குடும்பஅட்டைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாளொன்றுக்கு 75 முதல் 100 குடும்பங்களுக்கு மிகாமல் வழங்கப்படும்.

புகார் தெரிவிக்கலாம்

இதுதொடர்பாக நாள், நேரம் போன்ற விவரங்கள் குறிப்பிட்டு டோக்கன்கள் வீடுதோறும் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வழங்க மாவட்ட நிர்வாகத்தால் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான உரிய பதிவுகள் ஒப்புதல் படிவத்தில் பதிவேட்டில் குறிப்பிடப்பட வேண்டும். கொரோனா நிவாரணத்தொகை வழங்கப்பட்டதும் அவர்களின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும்.

கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் ஒருமீட்டர் இடைவெளியில் சமூக இடைவெளியை கடைபிடித்து கட்டாயம் முககவசம் அணிந்தும், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தும் ரேஷன் கடைகளுக்கு சென்று நிவாரண தொகையை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த நிவாரணத் தொகை வழங்குவது தொடர்பான பணிகளில் ஏதேனும் குறைப்பாடுகள் இருப்பின் பொதுமக்கள் தாலுகா வாரியாக உள்ள அலுவலர்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story