மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி வாகன சோதனை- கர்நாடக மது கடத்தியதாக 20 பேர் கைது


மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி வாகன சோதனை- கர்நாடக மது கடத்தியதாக 20 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2021 11:03 PM GMT (Updated: 16 Jun 2021 11:03 PM GMT)

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மது கடத்தியதாக 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மது கடத்தியதாக 20 பேரை போலீசார் கைது செய்தனர்.  
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அருகே உள்ள கடம்பூர் போலீசார் மாக்கம்பாளையம் செல்லும் வழியில் உள்ள குரும்பூர் பிரிவு என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக வந்த 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் வந்தனர். அவர்களை பிடித்து நிறுத்தி, மோட்டார்சைக்கிளை சோதனை செய்தபோது 3 மோட்டார்சைக்கிள்களிலும் மொத்தம் 179 கர்நாடக மதுபாட்டில்கள் இருந்தன. கர்நாடக மாநிலத்தில் இருந்து அவர்கள் மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து மோட்டார்சைக்கிள்களில் வந்த கே.என்.பாளையத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 29), சத்தியமங்கலத்தை சேர்ந்த பார்த்திபன் (43), ராமபையலூரை சேர்ந்த மயில்சாமி (31), கரளியத்தை சேர்ந்த ராமசாமி (42), சிக்கரசம்பாளையத்தை சேர்ந்த ராகுல் (21) சூர்யபிரகாஷ் (22) ஆகிய 6 பேரையும் கைது செய்தார்கள். 
302 மதுபாட்டில்கள்
 இதேபோல் கே.என்.பாளையம் ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது டி.என்.பாளையத்தை சேர்ந்த பார்த்திபன் (24), விக்னேஷ் (25) என்பவர்களிடம் இருந்து 43 கர்நாடக மதுபாட்டில்களும், கொடிவேரியை சேர்ந்த பழனிச்சாமி (31) என்பவரிடம் 46 மதுபாட்டில்களும், கெஞ்சனூரை சேர்ந்த பிரதீப் (22) சத்தியா (21) கே.என்.பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணா (20) ஆகியோரிடமிருந்து 34 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள். கர்நாடகாவில் இருந்து மது கடத்தி வந்ததாக 6 பேரையும் கைது செய்தார்கள். மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டு 302 கர்நாடக மதுபாட்டில்களும், 6 மோட்டார்சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 
கோபி 
கோபி அருகே உள்ள உக்கரம் செல்லும் ரோட்டில் கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. போலீசார் காரை நிறுத்தி சோதனை நடத்தினார்கள். அப்போது அதில் பெட்டி பெட்டியாக கர்நாடக மது பாக்கெட்டுகள் இருந்தது. உடனே போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். 
அதில் அவர் கூடக்கரை தொட்டியபாளையத்தை சேர்ந்த சம்பத்குமார் (வயது 42) என்பதும், திருட்டு தனமாக விற்க கர்நாடகாவில் இருந்து மதுபாக்கெட்டுகளை காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பத்குமாரை கைது செய்து அவரிடம் இருந்து 192 மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தார்கள். 
அந்தியூர்
அந்தியூர் அருகே உள்ள பர்கூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது மோட்டார்சைக்கிளில் அந்த வழியாக ஒருவர் வந்தார். உடனே போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, மோட்டார்சைக்கிளை சோதனை செய்தார்கள். அப்போது மோட்டார்சைக்கிளில் 48 கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ‘அவர் அந்தியூர் அருகே உள்ள நாகலூர் கொண்டயம்பாளையம் பகுதியை சேர்ந்த தொழிலாளி ஆறுமுகம் (வயது 47) என்பதும், கர்நாடகாவில் இருந்து அந்தியூருக்கு மதுபாக்கெட்டுகளை விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆறுமுகத்தை கைது செய்தார்கள். ேமலும் அவரிடம் இருந்து 48 மதுபாக்கெட்டுகளையும், மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தார்கள். 
பர்கூர்
இதேபோல் பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான்பொன்னையன், சக்திவேல் ஆகியோர் தட்டக்கரை சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது 4 பேர் 4 மோட்டார் சைக்கிள்களில் வந்தார்கள்.
அவர்களை போலீசார் பிடித்து சோதனை நடத்தியதில், சிந்தகவுண்டம்பாளையம் பரைக்காடு பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரிடம் இருந்து 39 கர்நாடக மதுபாட்டில்களும், வேம்பத்தியை சேர்ந்த ராமன் என்பவரிடம் இருந்து 38 கர்நாடக மது பாட்டில்களும், மணிகண்டன் (28)  என்பவரிடம் இருந்து 24 கர்நாடக மது பாட்டில்களும், சின்னத்தம்பிபாளையம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் இருந்து 28 கர்நாடக மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள். இதைத்தொடர்ந்து கர்நாடக மதுபாட்டில்கள் கடத்தியதாக 4 பேரையும் போலீசர் கைது செய்தார்கள். 129 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 
வெள்ளித்திருப்பூர்
அந்தியூரை அடுத்த தொட்டிக்கிணறு பகுதியில் வெள்ளித்திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் சந்தேகப்படும் வகையில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 
விசாரணையில், ‘அவர்கள் சென்னம்பட்டி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்த கிறிஸ்டோபர் (25), சென்னம்பட்டி காட்டுத்தோட்டம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (33) என்பதும், அவர்கள் 2 பேரும் வெள்ளித்திருப்பூர் பகுதியில் விற்பனை செய்வதற்காக கர்நாடக மாநிலம் ராமநாதபுரத்தில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததும்,’ தெரியவந்தது. 
இதையடுத்து மோகன்ராஜை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 90 மதுபாட்டில்கள், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். 
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் ரோந்து ெசன்றனர். அப்போது அந்த பகுதியில் ஒருவர் ஸ்கூட்டர் ஒன்றில் கள் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததை கண்டனர். போலீசாரை கண்டதும், அவர் அங்கிருந்து ஓட முயன்றார். 
உடனே அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ‘அவர் சத்தியமங்கலத்தை அடுத்த பெரியகுளத்தை சேர்ந்த வெங்கடசேன் (40), என்பதும் அவர் அந்த பகுதியில் கள் விற்றதும், தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வெங்கடேசனை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 30 லிட்டர் கள் மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர். 
நம்பியூர்
வரப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்- இன்ஸ்பெக்டர்கள் மோகனன், செல்வம், தனிப்பிரிவு போலீஸ் தங்கதுரை மற்றும் மதுவிலக்கு போலீசார் நம்பியூரை அடுத்த ராயர்பாளையம் மேட்டுக்காடு பகுதியை சேர்ந்த ராமன் என்பவரின் ஆட்டுப்பட்டியில் சோதனையிட்டனர். 
அப்போது அங்கு பிளாஸ்டிக் குடத்தில் 30 லிட்டர் சாராய ஊறல் இருந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து ராமனை கைது செய்த போலீசார் அங்கிருந்த சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர். 

Related Tags :
Next Story