4 நாட்களில் சித்தோட்டில் ரூ.40 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள இணைப்பு சாலை திறப்பு; விபத்தில் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களை கவுரவப்படுத்திய அமைச்சர்

சித்தோட்டில் 4 நாட்களில் ரூ.40 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இணைப்பு சாலை திறப்பு விழாவில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை அழைத்து அவர்களை வைத்தே சாலையை திறக்கச்செய்து அமைச்சர் சு.முத்துசாமி கவுரவப்படுத்தினார்.
ஈரோடு
சித்தோட்டில் 4 நாட்களில் ரூ.40 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இணைப்பு சாலை திறப்பு விழாவில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை அழைத்து அவர்களை வைத்தே சாலையை திறக்கச்செய்து அமைச்சர் சு.முத்துசாமி கவுரவப்படுத்தினார்.
4 வழிச்சாலை விபத்துகள்
ஈரோடு மாவட்டத்தில் விஜயமங்கலம் முதல் லட்சுமி நகர் வரை தேசிய நெடுஞ்சாலைத்துறை 4 வழிச்சாலை உள்ளது. இந்த சாலையை ஒட்டி ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நகரங்களுக்கு செல்லும் பிரிவு ரோடுகள் உள்ளன. லட்சுமி நகர், சித்தோடு, நசியனூர், கங்காபுரம், ஆட்டையாம்பாளையம், பெருந்துறை, காஞ்சிக்கோவில் பிரிவு, பெத்தாம்பாளையம், துடுப்பதி, விஜயமங்கலம் என்று பல்வேறு இடங்களுக்கு செல்லும் முக்கிய ரோடுகள் 4 வழிச்சாலையுடன் இணைகின்றன.
4 வழிச்சாலை கொச்சி-பெங்களூரு முக்கிய ரோடாக இருப்பதால் தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக செல்கின்றன. இங்குள்ள சாலை பிரிவுகளில் போதிய மின் விளக்கு வசதிகள், மேம்பாலம், இணைப்பு சாலை வசதிகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. பல்வேறு நபர்கள் உயிரிழந்தும் வருகிறார்கள். இதனால் பல குடும்பங்கள் ஆதரவற்றநிலைக்கு தள்ளப்படுகின்றன.
அமைச்சர் கவுரவித்தார்
இதுபோல் சித்தோடு பகுதியில் ஈரோடு-சத்தியமங்கலம் ரோட்டுக்கான இணைப்பு சாலை முறையாக அமைக்கப்படாமல் இருந்தது. இந்த சாலையில் மட்டும் 45 விபத்துகள் நடந்து உள்ளன. எனவே இங்கு இணைப்பு சாலை வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. மக்களின் அத்தியாவசிய கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்தல் என்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவை தொடர்ந்து ரூ.40 லட்சம் செலவில் சித்தோட்டில் இணைப்பு சாலை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டது. தொடங்கி 4 நாட்களில் இந்த பணிகள் நிறைவடைந்து நேற்று திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ரிப்பன்வெட்டி சாலையை திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால், அவர், இந்த பகுதியில் விபத்தில் இறந்த தங்கராஜ், சபரி ஆகியோரின் நினைவாக அவர்களின் குடும்பத்தை சேர்ந்த பானுப்பிரியா, காவியா ஆகியோரை வைத்து ரிப்பன் வெட்டி சாலையை திறக்க வைத்து கவுரவித்தார்.
பின்னர் சாலையில் 2 பக்கமும் மரக்கன்றுகளை அமைச்சர் சு.முத்துசாமி நட்டுவைத்தார். அவரைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி, மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், ஆர்.டி.ஓ. பிரேமலதா ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.
வேண்டுகோள்
நிகழ்ச்சியில் கோபி கோட்ட நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு செயற்பொறியாளர் குப்புசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த இணைப்பு சாலை திறக்கப்பட்டதை தொடர்ந்து பேரோட்டில் இருந்து நேரடியாக சித்தோடு செல்லும் ரோடு அடைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் இடையூறு இல்லாமல் பாலம் வழியாக சாலையை கடக்க வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. சாலைகளில் பயணிக்கும் போது பொதுமக்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்க வேண்டும் என்று அமைச்சர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
Related Tags :
Next Story






