வீடு, வீடாக 2 முறை சென்று கணக்கெடுக்கும் தன்னார்வலர்கள்


வீடு, வீடாக 2 முறை சென்று கணக்கெடுக்கும் தன்னார்வலர்கள்
x
தினத்தந்தி 19 Jun 2021 7:44 PM IST (Updated: 19 Jun 2021 7:44 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகராட்சியில் யாருக்கேனும் தொற்று அறிகுறி உள்ளதா? என வீடு, வீடாக 2 முறை சென்று தன்னார்வலர்கள் கணக்கெடுத்து வருகின்றனர்.

ஊட்டி

ஊட்டி நகராட்சியில் யாருக்கேனும் தொற்று அறிகுறி உள்ளதா? என வீடு, வீடாக 2 முறை சென்று தன்னார்வலர்கள்  கணக்கெடுத்து வருகின்றனர்.

தொற்று பரவல்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பரவல் குறைந்து வருகிறது. தொற்று அறிகுறி தென்பட்ட 500-க்கும் மேற்பட்ட இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆனாலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருவதால் தொற்று பரவல் அதிகரித்தது.

இதை தடுக்க மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தன்னார்வலர்களை கொண்டு வீடு, வீடாக சென்று யாருக்கேனும் அறிகுறிகள் உள்ளதா? என்று கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டாலும், அதை சொல்ல சிலர் தயக்கம் காட்டுகின்றனர்.

நுரையீரல் பாதிப்பு

இருப்பினும் தன்னார்வலர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்வதுடன், பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை பரிசோதிக்கின்றனர். ஏனென்றால் சிகிச்சைக்கு தாமதம் ஏற்பட்டால் நுரையீரலில் பாதிப்பு அதிகமாகும். 

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஊட்டி நகராட்சியில் 250 தன்னார்வலர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு, மொத்தம் உள்ள 22 ஆயிரம் வீடுகளுக்கு சென்று 2 முறை கணக்கெடுப்பு நடத்தி முடித்து உள்ளனர். 

ஒருமுறை சுமார் 75 ஆயிரம் பேரிடம் அறிகுறிகள் தென்படுகிறதா, தடுப்பூசி போட்டு இருக்கிறார்களா போன்ற விவரங்களை சேகரித்தனர். கணக்கெடுப்பின் போது அறிகுறி தென்பட்டால் வட்டார மருத்துவ அலுவலரிடம் தெரிவித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சுழற்சி முறை

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- ஊட்டியில் வீடு, வீடாக கணக்கெடுக்கும்போது 8 பேருக்கு அறிகுறிகள் தென்பட்டது. பரிசோதனை முடிவில் அவர்களில் 6 பேருக்கு தொற்று உறுதியானது. பின்பு அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 

தன்னார்வலர்கள் தொடர்ந்து ஒரு மாதம் சுழற்சி முறையில் வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள். ஒரு முறை அறிகுறி இல்லை என்று பொதுமக்கள் தெரிவித்தாலும், அடுத்து செல்லும் போது அறிகுறி தென்பட வாய்ப்புள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

1 More update

Next Story