சென்னை ஐஸ்-அவுசில் பயங்கரம் கோவில் உண்டியலை உடைத்து, காவலாளி படுகொலை சிறுவர்கள் நடத்திய வெறியாட்டம்


சென்னை ஐஸ்-அவுசில் பயங்கரம் கோவில் உண்டியலை உடைத்து, காவலாளி படுகொலை சிறுவர்கள் நடத்திய வெறியாட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2021 12:13 AM GMT (Updated: 21 Jun 2021 12:13 AM GMT)

சென்னை ஐஸ்-அவுசில் கோவில் உண்டியலை உடைத்து, காவலாளி படுகொலை செய்யப்பட்டார். கொலை வெறியாட்டம் நடத்திய 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை ஐஸ்-அவுஸ் நடேசன் சாலை பகுதியில் பிரபல தீர்த்தபாலீஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலில் கடந்த 2 மாதங்களாக பாபு (வயது 45) என்பவர் காவலாளியாக வேலை செய்துவந்தார். இரவிலும் அவர் கோவிலிலேயே தங்கி இருப்பார்.

அவருக்கு மனைவியும், மகளும் உள்ளனர். திருவல்லிக்கேணி, நடுக்குப்பத்தில் வசித்தார். கடந்த 17-ந் தேதி இரவு கோவிலுக்குள் முகமூடி அணிந்த 4 மர்மநபர்கள் நுழைந்தனர்.

உண்டியல் உடைப்பு-தாக்குதல்

அவர்கள் 4 பேரும் சேர்ந்து இரும்பு ராடால் கோவில் உண்டியலை உடைத்தனர். சத்தம் கேட்டு காவலாளி பாபு அவர்களை பிடிக்க முயன்றார். ஆனால் 4 பேரும் சேர்ந்து பாபுவை, உண்டியலை உடைத்த இரும்பு ராடால் தாக்கினார்கள். அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

பின்னர் உண்டியலை உடைத்து அதற்குள் இருந்த பணத்தை 4 பேரும் சேர்ந்து மூட்டை கட்டினார்கள். இதற்குள் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்தனர். போலீசுக்கு தகவல் பறந்தது. ரோந்து போலீசாரும் விரைந்து வந்தனர். இதனால் உண்டியல் பணத்தை எடுக்காமல் அங்கேயே போட்டு விட்டு, கொள்ளையர்கள் 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். பாபுவின் செல்போனை எடுத்து சென்றுவிட்டனர்.

படுகொலை

கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த காவலாளி பாபு, ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்து போனார். இதனால் இந்த சம்பவம் கொலை-கொள்ளை முயற்சி சம்பவமாக மாறிவிட்டது. ஐஸ்-அவுஸ் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி கொலை மற்றும் கொள்ளை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்தார்.

போலீஸ் விசாரணையில், கொலை-கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் 14 வயது, 16 வயது, 15 வயது மற்றும் 17 வயது நிரம்பிய சிறுவர்கள். அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். பாபுவின் செல்போன் மீட்கப்பட்டது. இந்த சிறு வயதிலேயே அவர்கள் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்தது. அவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் ஐஸ்-அவுஸ் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மீனவர் அடித்துக்கொலை

இதேபோல் திருவொற்றியூர் பூங்காவனபுரத்தை சேர்ந்தவர் குப்பன் (46). மீனவரான இவருக்கும், ஒண்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்த மோகன் (36), ரகு (45), துரைராஜ் (56). ஆகியோருக்கும் இடையே ஒண்டிகுப்பம் பெருமாள் கோவில் அருகில் வீடு கட்டுவதில் தகராறு இருந்து வந்தது.

இதுதொடர்பாக கடந்த 17-ந் தேதி அவர்களுக்குள் மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. கட்டையாலும், கற்களாலும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.

இது தொடர்பாக திருவொற்றியூர் போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த மோதலில் குப்பனுக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. அதை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய முற்பட்டபோது சிகிச்சை பலனின்றி குப்பன் உயிரிழந்தார்.

இதையடுத்து போலீசார் அடிதடி வழக்கை, கொலை வழக்காக மாற்றினர். இதுதொடர்பாக மோகன், ரகு ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான துரைராஜை தேடி வருகின்றனர்.

Next Story