76 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி


76 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி
x
தினத்தந்தி 21 Jun 2021 4:31 PM GMT (Updated: 21 Jun 2021 4:31 PM GMT)

மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 76 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கிறது.

மதுரை,ஜூன்.
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 76 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கிறது.
கொரோனா தடுப்பூசி
கொரோனாவை வெல்லும் பேராயுதமாக தடுப்பூசி விளங்குவதால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் தற்போது அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் நேற்றைய நிலவரப்படி 4 லட்சத்து 80 ஆயிரத்து 308 பேர் தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்கள். நேற்று ஒரே நாளில் 14 ஆயிரத்து 411 பேர் தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்கள்.
கடந்த சில தினங்களாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படாத நிலை இருந்தது. 
இந்த நிலையில் மதுரை மாவட்டத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதன் விளைவாக, தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள்  நடைபெற்று வருகிறது.
76 இடங்கள்
நேற்று மாலை நிலவரப்படி மதுரை மாவட்டத்தில் 35 ஆயிரத்து 20 தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 76 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 
குறிப்பாக உசிலம்பட்டி, கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி, செக்கானூரணி, எழுமலை, செல்லம்பட்டி, தொட்டப்பநாயக்கனூர், அலங்காநல்லூர், கட்சைகட்டி, கருங்காலக்குடி, வலையங்குளம், கள்ளந்திரி, மேலூர், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
நகர்ப்பகுதி
மேலும் நகர்ப் பகுதியில் உள்ள விராட்டிபத்து, வில்லாபுரம், திருப்பரங்குன்றம், திருநகர், தெற்கு வாசல், சுப்பிரமணியபுரம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது. மாவட்டத்தில் மொத்தம் 76 இடங்களில் இன்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறும் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் 12 ஆயிரத்து 900 தடுப்பூசிகள் அந்தந்த மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Next Story