எருமப்பட்டி அருகே மோட்டார்சைக்கிள்- மொபட் மோதல்; வாலிபர் பலி இளம்பெண் படுகாயம்


எருமப்பட்டி அருகே மோட்டார்சைக்கிள்- மொபட் மோதல்; வாலிபர் பலி இளம்பெண் படுகாயம்
x
தினத்தந்தி 22 Jun 2021 1:30 AM GMT (Updated: 22 Jun 2021 1:32 AM GMT)

எருமப்பட்டி அருகே மோட்டார்சைக்கிள், மொபட் நேருக்க நேர் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார். இளம்பெண் படுகாயம் அடைந்தார்.

எருமப்பட்டி,

எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டியை சேர்ந்தவர் சிங்காரம் மகன் மோகன் (வயது 28). போர்வெல்லில் மோட்டாைர ஏற்றி இறக்கும் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று மாலை தனது மோட்டார்சைக்கிளில் எருமப்பட்டி கைகாட்டி சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். 
அந்தசமயம் எருமப்பட்டி அருகே சிங்களம் கோம்பை பகுதியில் எதிரே விஜயகுமார் மனைவி அமிர்தவல்லி (24) என்பவர் தன்னுடைய மொபட்டில் பொட்டிரெட்டிபட்டி சென்று விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். 

அப்போது எருமப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கண் இமைக்கும் நேரத்தில் 2 இருசக்கர வாகனங்களும் பயங்கரமாக நேருக்கு நேர் மோதி கொண்டது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  ஆனால் செல்லும் வழியிலேயே மோகன் பரிதாபமாக இறந்தார். அமிர்தவல்லி உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story