ஒரே நாளில் 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு


ஒரே நாளில் 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 22 Jun 2021 8:27 PM GMT (Updated: 22 Jun 2021 8:27 PM GMT)

மதுரை செல்லூர் பகுதியில் ஒரே நாளில் 2 வீடுகளின் கதவுகளை உடைத்து நகை, பணம் திருடு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை,
-
மதுரை செல்லூர் பகுதியில் ஒரே நாளில் 2 வீடுகளின் கதவுகளை உடைத்து நகை, பணம் திருடு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

11 பவுன் நகை திருட்டு

மதுரை செல்லூர் ஜீவா மெயின் ரோடு, வள்ளூவர் தெருவை சேர்ந்தவர் வடிவேல்ராஜா. இவரது மனைவி கவிதா (வயது 28). சம்பவத்தன்று காலை இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். மதியம் அவர் வீட்டிற்கு திரும்பி வந்த போது பூட்டியிருந்த வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் விரைந்து வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பீரோவில் வைத்திருந்த 11 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தகவலின் பேரில் கைரேகை நிபுணர்கள் விரைந்து சென்று வீட்டில் கதவு, பீரோ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பதிவான கைரேகை தடயங்களை சேகரித்தனர்.

மேலும் 2 வீடுகளில்...

இதே போல செல்லூர் அகிம்சாபுரம் 5-வது தெருவில் உள்ள முருகேசன் (53) என்பவரின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூ.4 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது.
அதே போன்று செல்லூர் கட்டபொம்மன் நகர், பாண்டியன் தெருவில் அஜித்குமார் (22) என்பவரது வீட்டு கதவும் உடைக்கப்பட்டு இருந்தது. அவரது வீட்டில் பணம், நகை திருடு போகவில்லை. இது குறித்து செல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

Next Story