திருத்தணி முருகன் கோவில் செயல் அலுவலர் மீது ஊழியர்கள் புகார் மனு


திருத்தணி முருகன் கோவில் செயல் அலுவலர் மீது ஊழியர்கள் புகார் மனு
x
தினத்தந்தி 27 Jun 2021 4:33 AM GMT (Updated: 27 Jun 2021 4:33 AM GMT)

திருத்தணி முருகன் கோவில் செயல் அலுவலர் மீது ஊழியர்கள் புகார் மனு மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளிப்பட்டு, 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான சுப்பிரமணிய சாமி கோவில் மலை மீது அமைந்துள்ளது. இந்த கோவிலில் இணை ஆணையரும், செயல் அலுவலராகவும் பரஞ்சோதி என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் அவர் குறித்து கோவில் ஊழியர்கள் குற்றம் சாட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ என்ற பிரிவுக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திருத்தணி சுப்பிரமணிய சாமி திருக்கோவில் பணியாளர்கள் அனைவரும் கோவில் வளர்ச்சிக்காகவும், பக்தர்கள் நலனுக்காகவும், அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு நல்கிடும் வகையில் முழு மூச்சாக அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்பாக பணி செய்ய தயாராக உள்ளோம்.

இந்தநிலையில் கோவில் பணியாளர்களை இணை ஆணையரும், செயல் அலுவலருமான பரஞ்சோதி அவர்கள் ஒருமையில் தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும், கொரோனா காலத்தில் பணியாளர்களை நள்ளிரவு வரை பணி செய்ய மிரட்டுவதும், ஒட்டு மொத்த பணியாளர்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே இனி வரும் காலங்களில் இது போல் சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் தவிர்த்திடுமாறு கோவில் பணியாளர்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ என்ற தனிப்பிரிவிற்கும், தமிழக அறநிலைத்துறை அமைச்சருக்கும் அவர்கள் அனுப்பி வைத்தனர்.


Next Story