வீடுகளில் கழிவறை கட்ட மானியம் ரூ.20 ஆயிரமாக உயர்வு - எடியூரப்பா அறிவிப்பு


வீடுகளில் கழிவறை கட்ட மானியம் ரூ.20 ஆயிரமாக உயர்வு - எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 2 July 2021 8:40 PM GMT (Updated: 2 July 2021 8:40 PM GMT)

கர்நாடகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் தங்களின் வீடுகளில் கழிவறை கட்ட மானியம் ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.

பெங்களூரு:
  
அறிக்கை தாக்கல்

  முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் வளர்ச்சி கவுன்சில் ஆலோசனை கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் செலவு செய்யப்பட்ட விவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது தவிர இன்னும் பல்வேறு துறைகளின் வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் எடியூரப்பா பேசியதாவது:-

  கர்நாடகத்தில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக ரூ.35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் காலாண்டிற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும். அந்த நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விவரங்களை அதிகாரிகள் தயார் செய்ய வேண்டும். இந்த கூட்டத்தில் செயல் திட்டங்கள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ரூ.20 ஆயிரமாக உயர்வு

  அதனால் திட்ட பணிகளை அதிகாரிகள் உடனே தொடங்க வேண்டும். நிதி, கல்வி, சுகாதாரம் மற்றும் பிற வளர்ச்சி பணிகள், அடிப்படை பணிகளுக்கு நிதியை செலவு செய்ய வேண்டும். திட்ட பணிகளில் 100 சதவீத இலக்கை அடைய வேண்டும். ஆதிதிராவிடர்கள், பழங்குடியினருக்கு வீடுகளில் கழிவறை கட்ட தற்போது ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியத்தை ரூ, .20 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

  இந்த திட்டங்களை செயல்படுத்தும்போது எந்த தவறுகளும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்பத்தும் இந்த திட்டங்களை சரியான முறையில் அமல்படுத்த வேண்டும். இந்த இந்த மக்களுக்காக கடந்த 2020-21-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.25 ஆயிரத்து 945 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் ரூ.19 ஆயிரத்து 646 கோடி செலவு செய்யப்பட்டது.
  இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

  இந்த கூட்டத்தில் துணை முதல்-மந்திரிகள் கோவிந்த் கார்ஜோள், லட்சுமண் சவதி, சமூக நலத்துறை மந்திரி ஸ்ரீராமுலு, கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story