வங்கி கணக்கு விவரங்கள், ரகசிய குறியீடு எண்ணை யாருக்கும் தெரிவிக்க கூடாது; சைபர் கிரைம் போலீசார் தகவல்


வங்கி கணக்கு விவரங்கள், ரகசிய குறியீடு எண்ணை யாருக்கும் தெரிவிக்க கூடாது; சைபர் கிரைம் போலீசார் தகவல்
x
தினத்தந்தி 2 July 2021 9:18 PM GMT (Updated: 2 July 2021 9:18 PM GMT)

வங்கி கணக்கு விவரங்கள், ரகசிய குறியீடு எண்ணை யாருக்கும் தெரிவிக்க கூடாது என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

ஈரோடு
வங்கி கணக்கு விவரங்கள், ரகசிய குறியீடு எண்ணை யாருக்கும் தெரிவிக்க கூடாது என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
பணபரிவர்த்தனை
ஆன்லைன் பணபரிவர்த்தனையை ஏராளமானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆன்லைன் மூலமாக பண மோசடியும் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக வங்கியில் இருந்து அதிகாரிகள் பேசுவதைபோல பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் தொடர்பு கொண்டு வங்கி கணக்கின் விவரம், ஏ.டி.எம். எண், ரகசிய குறியீடு எண் போன்ற விவரங்களை வாங்கி விடுகிறார்கள். பின்னர் அந்த விவரங்களை வைத்து வங்கி கணக்கில் உள்ள பணத்தையும் மர்ம கும்பல் மோசடி செய்து வருகிறது.
இதன்காரணமாக வங்கியில் இருந்து பேசுவதை போல் யார் பேசினாலும், வங்கி கணக்கு விவரத்தை கொடுக்க வேண்டாம் என்று வங்கிகளின் தரப்பிலும், போலீசார் தரப்பிலும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஈரோடு சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
மோசடி
வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் செல்போன் எண்ணுக்கு அவர்களது வங்கியில் இருந்து அனுப்பப்படுவது போல் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அந்த குறுஞ்செய்தியில் அவர்களது வங்கி கணக்குடன் பான்கார்டு விவரங்கள் இணைக்க வேண்டி இருப்பதாகவும், அதற்காக ஒரு லிங்கில் சென்று ஆன்லைனில் பதிவிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்த லிங்கில் உள்ள இணையதளத்தில் சென்றதும், வங்கியின் இணையதளத்தை போன்று காணப்படுவதால் வாடிக்கையாளர்கள் ஏமாந்துவிடுகிறார்கள். இதனால் அந்த இணையதளத்தில் கேட்கும் விவரங்களை வாடிக்கையாளர்கள் கொடுத்து விடுகிறார்கள்.
அவர்கள் வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். கார்டு எண், ரகசிய குறியீடு எண் போன்ற விவரங்களை கொடுப்பதன் மூலம் வங்கியில் உள்ள பணத்தை மோசடி செய்து எடுத்து விடுகின்றனர். எனவே வங்கியில் இருந்து அனுப்புவதை போல குறுஞ்செய்தி வந்தாலோ, வங்கியில் இருந்து அழைப்பதை போல செல்போனில் தொடர்பு கொண்டாலோ பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எந்தவொரு தகவலையும் பகிரக்கூடாது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Next Story