கவுந்தப்பாடி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை: ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன


கவுந்தப்பாடி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை: ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன
x
தினத்தந்தி 2 July 2021 9:29 PM GMT (Updated: 2 July 2021 9:29 PM GMT)

கவுந்தப்பாடி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்ததில், ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.

கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்ததில், ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.
வாழைகள் சேதம்
கவுந்தப்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதில் கண்ணாடிப்புதூர், அய்யன் வலசு, வேலம்பாளையம், ஆவரங்காட்டூர் உள்பட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:-
நாங்கள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மொந்தன், செவ்வாழை, ரஸ்தாளி, பூவன் போன்ற வாழைகளை சாகுபடி செய்து இருந்தோம். தற்போது அந்த வாழைகள் நன்கு வளர்ந்து இன்னும் சில வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது.
விவசாயிகள்
இந்த நிலையில் நேற்று முன்தினம் கவுந்தப்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதில் நாங்கள் சாகுபடி செய்திருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்தும், அடியோடு சாய்ந்தும் சேதம் அடைந்தன.
ஏற்கனவே கொரோனா நோய் தாக்கத்தால் வாழைத்தார்களுக்கு சரியான விலை கிடைக்காமல் நஷ்டம் அடைந்து உள்ளோம். இந்த நிலையில் சூறாவளிக்காற்றில் வாழைகள் சாய்ந்தது எங்களை மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட எங்களுக்கு நஷ்டஈடு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Next Story