வட்டிக்கு பணம் கொடுப்பதாக கூறி வறுமையில் உள்ள பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த தொழிலாளி கைது


வட்டிக்கு பணம் கொடுப்பதாக கூறி வறுமையில் உள்ள பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த தொழிலாளி கைது
x
தினத்தந்தி 3 July 2021 10:22 PM GMT (Updated: 3 July 2021 10:22 PM GMT)

கவுந்தப்பாடி அருகே வட்டிக்கு பணம் கொடுப்பதாக கூறி வறுமையில் உள்ள பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த தொழிலாளியை போலீசார் கைது செய்தார்கள்.

கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி அருகே வட்டிக்கு பணம் கொடுப்பதாக கூறி வறுமையில் உள்ள பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த தொழிலாளியை போலீசார் கைது செய்தார்கள். 
டிப்-டாப் நபர்
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள தயிர்பாளையத்தை சேர்ந்தவர் பானுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருடைய கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். அதனால் வாடகை வீட்டில் வசித்து கொண்டு விசைத்தறி கூடத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த வாரம் பானுமதி தனது பக்கத்து வீட்டில் உள்ள பெண்களுடன் வீட்டின் முன்பு பேசிக்கொண்டு இருந்தார். 
அப்போது மோட்டார்சைக்கிளில் டிப்-டாப்பாக அங்கு வந்த  நபர் ஒருவர் இந்தபகுதியில் வீடு வாடகைக்கு கிடைக்குமா? என்று கேட்டுள்ளார். 
வட்டிக்கு பணம்
அதற்கு பெண்கள் இந்த பகுதியில் வீடு எதுவும் வாடகைக்கு இல்லை. நீங்கள் யார்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் என் பெயர் குமார், வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறேன். குறிப்பாக பெண்களுக்கு மட்டும் பணம் தருகிறேன் என்று கூறினார். உடனே அங்கிருந்த பெண்கள் தங்களுக்கும் வட்டிக்கு பணம் வேண்டும் என்று கேட்டனர். அதற்கு குமார் தன்னுடைய முகவரி அட்டையை கொடுத்து, அந்த பெண்களின் செல்போன் எண்களையும் பெற்றுக்கொண்டு, உங்களுக்கு பணம் கொண்டு வந்து கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.
 அழகான பெண்கள் வேண்டும்
அதன்பின்னர் அன்று மாலை பானுமதியை செல்போனில் தொடர்புகொண்ட குமார் உங்களுக்கு பணம் வேண்டுமா? கொண்டு வருகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் தேர்தலின்போது என்னிடம் அரசியல்வாதிகள் சிலர் கருப்பு பணம் கொடுத்து வைத்துள்ளார்கள். அந்த பணத்தைத்தான் வட்டிக்கு விட்டு வருகிறேன். 
என்னுடைய நிதி நிறுவனத்துக்கு அழகான இளம்பெண்கள் வேலைக்கு வேண்டும் இருந்தால் சொல்லு, அதற்கும் பணம் தருகிறேன் என்று கூறியுள்ளார். 
பெண் போலீஸ்
குமார் பேசுவதை கேட்ட பானுமதிக்கு அவர் மேல் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் மற்ற பெண்களிடம் இதுபற்றி கூறினார். உடனே அனைவரும் சேர்ந்து இதுபற்றி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்கள். 
இந்த புகார் கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கவுந்தப்பாடி போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து கவுந்தப்பாடி போலீசார் குமாரை பிடித்து விசாரிக்க, அவரை பானுமதி வீட்டுக்கு வரவழைக்க முடிவு செய்தார்கள். அதனால் பானுமதியின் வீட்டில் ஒரு பெண் போலீசை வைத்து குமாருக்கு போன் செய்தார்கள். பானுமதியின் வீட்டுக்கு அருகிலேயே போலீசாரும் மறைந்திருந்தார்கள். 
செல்போன் சிக்னல்
சிறிது நேரத்தில் பானுமதியின் வீட்டுக்கு குமார் மோட்டார்சைக்கிளில் வந்தார். ஆனால் வீட்டு வாசலில் நின்றுகொண்டு இருந்த போலீசாரின் மோட்டார் சைக்கிள்களை பார்த்துவிட்டு திரும்பி சென்றுவிட்டார். போலீசாரும் அவரை பிடிக்க முடியவில்லை. இதையடுத்து குமாரின் செல்போனை ஆய்வு செய்தார்கள். 
அப்போது குமாரின் செல்போன் சிக்னல் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ளதை உறுதி செய்தனர். ஆனால் அந்த பகுதியில் குமார் கிடைக்கவில்லை.
மீண்டும் போன்
இந்தநிலையில் 2 நாட்களுக்கு முன்பு குமார் மீண்டும் பானுமதிக்கு போன் செய்து நான் உன் வீட்டுக்கு வருகிறேன். இளம்பெண் ஒருவர் இருக்கிறார் என்று சொன்னாயே அவரையும் வீட்டில் இருக்க சொல் என்று கூறியுள்ளார். 
பானுமதி ஏற்கனவே போலீசார் கூறியபடி குமாரிடம் எதுவும் காட்டிக்கொள்ளாமல் சரி வாருங்கள் என்று கூறினார். அதன்படி நேற்று காைல குமார் தயிர்பாளையத்தில் உள்ள பானுமதியின் வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்தார். அதேநேரம் பானுமதி போலீசாருக்கு இந்த தகவலை கூறியிருந்தார். உஷாரான போலீசார் குமாரை பிடிக்க தயிர்பாளையத்தில் காத்திருந்தார்கள். 
துரத்தி பிடித்தனர்...
பானுமதியின் வீட்டை நெருங்கும்போது போலீஸ் ஜீப் நிற்பதை குமார் பார்த்துவிட்டார். உடனே வீட்டு வாசலில் நின்றுகொண்டு இருந்த பானுமதியிடம் என்னை பிடித்து கொடுக்கிறாயா? உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறி விட்டு மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றார். போலீசாரும் விடாமல் துரத்தி சென்றார்கள். 
சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று குமாரை மடக்கிப்பிடித்து கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்துக்கு போலீசார் கொண்டு சென்றார்கள். 
ஏமாற்றி உல்லாசம்
போலீஸ் நிலையத்தில் குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. பிடிபட்டவர் கவுந்தப்பாடி அருகே உள்ள கவுந்தப்பாடிபுதூர் வையாபுரி வீதியை சேர்ந்த செல்வன் (வயது 42) என்பதும், தறிப்பட்டறை தொழிலாளியான செல்வத்துக்கு 2 மனைவிகள் மற்றும் குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. 
மேலும் செல்வன் வேலைக்கு செல்லாமல் டிப்-டாப்பாக உடையணிந்து தன்னை ஒரு நிதிநிறுவன அதிபர் என்று கூறிக்கொண்டு பெண்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்வார். பின்னர் அவர்களில் யார் வறுமையில் உள்ளார்கள் என்பதை தெரிந்துகொண்டு அவர்களுக்கு வட்டிக்கு பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறி அவர்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். 
சிறையில் அடைப்பு
செல்வனிடம் ஏமாந்த பெண்கள் பலர் இதை வெளியில் சொல்லாமல் விட்டதால் செல்வம் பல பெண்களிடம் தன் லீலையை அரங்கேற்றியுள்ளார். முடிவில் பானுமதியிடம் தன் வலையை வீசியபோது அவர் உஷார் ஆகி போலீசில் கூறியதால் செல்வன் பிடிபட்டுவிட்டார். 
இதையடுத்து கவுந்தப்பாடி போலீசார் செல்வனை கைது செய்து, கோபி மாவட்ட சிறையில் அடைத்தார்கள். 
தொடர் விசாரணை
செல்வன் இதுவரை எத்தனை பெண்களை ஏமாற்றி உள்ளார். வேறு ஏதாவது குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தார்கள். 
வறுமையில் உள்ள பெண்களிடம் சென்று பணம் தருவதாக அவர்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த தொழிலாளி கைது செய்யப்பட்ட சம்பவம் கவுந்தப்பாடி பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story