சென்னிமலை அருகே மாத்திரை கொடுத்த சம்பவத்தில் சிகிச்சையில் இருந்த முதியவரும் சாவு


சென்னிமலை அருகே மாத்திரை கொடுத்த சம்பவத்தில் சிகிச்சையில் இருந்த முதியவரும் சாவு
x
தினத்தந்தி 3 July 2021 10:23 PM GMT (Updated: 3 July 2021 10:23 PM GMT)

சென்னிமலை அருகே மாத்திரை கொடுத்த சம்பவத்தில் சிகிச்சையில் இருந்த முதியவரும் பரிதாபமாக இறந்தார்.

சென்னிமலை
சென்னிமலை அருகே மாத்திரை கொடுத்த சம்பவத்தில் சிகிச்சையில் இருந்த முதியவரும் பரிதாபமாக இறந்தார்.
சத்து மாத்திரை
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கே.ஜி.வலசு பெருமாள்மலை பகுதியை சேர்ந்தவர் கருப்பணகவுண்டர் (வயது 75). விவசாயி. கடந்த மாதம் 26-ந் தேதி காலையில் கருப்பணகவுண்டர், அவரது மனைவி மல்லிகா (58), மகள் தீபா (30) மற்றும் தோட்டத்துக்கு வேலை செய்ய வந்த குப்பம்மாள் (65) ஆகியோர் வீட்டில் இருந்தனர்.
அப்போது கருப்பணகவுண்டரின் குடும்ப நண்பரும், பக்கத்து தோட்டத்தில் குத்தகைக்கு விவசாயம் செய்து வந்தவருமான கல்யாணசுந்தரம் (43) என்பவர் சென்னிமலை பகுதியை சேர்ந்த 19 வயதுடைய கல்லூரி மாணவர் ஒருவர் மூலமாக கொரோனா சத்து மாத்திரை என விஷ மாத்திரையை கொடுத்துள்ளார்.
கைது
இந்த மாத்திரையை வாங்கி சாப்பிட்ட கருப்பணகவுண்டர், அவரது மனைவி மல்லிகா, மகள் தீபா மற்றும் வேலைக்கார பெண் குப்பம்மாள் ஆகியோர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் கருப்பணகவுண்டரை தவிர மற்ற 3 பேரும் அடுத்தடுத்து பலியானார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின்பேரில் சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில், கல்யாணசுந்தரத்துக்கு கருப்பணகவுண்டர் கொடுத்திருந்த ரூ.15 லட்சம் கடனை திருப்பி கேட்டதால் கருப்பணகவுண்டர் குடும்பத்தையே கல்யாணசுந்தரம் கொலை செய்ய முடிவு செய்து, விஷ மாத்திரையை கொடுத்தது தெரியவந்தது. அதன்பிறகு கல்யாணசுந்தரத்தையும், கல்லூரி மாணவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சாவு
இந்தநிலையில் தாய்-மகள் உள்பட 3 பேர் ஏற்கனவே இறந்தநிலையில் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கருப்பணகவுண்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை கருப்பணகவுண்டர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சென்னிமலை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story