ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி; புதிதாக 349 பேருக்கு தொற்று


ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி; புதிதாக 349 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 4 July 2021 9:16 PM GMT (Updated: 4 July 2021 9:16 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலியானார்கள். மேலும் புதிதாக 349 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலியானார்கள். மேலும் புதிதாக 349 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
புதிதாக 349 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. எனினும் தமிழக அளவில் பாதிப்பில் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து 2 -வது இடத்தில் உள்ளது. நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தில் 10 ஆயிரத்து 576 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 360 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 349 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் சிலர் வீட்டு தனிமையிலும், சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 90 ஆயிரத்து 815-ஆக உயர்ந்தது.
4 பேர் பலி
இதற்கிடையில் கொரோனாவுக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 55 வயது பெண் கடந்த மாதம் 29-ந் தேதியும், 75 வயது முதியவர் மற்றும் 80 வயது மூதாட்டி ஆகியோர் கடந்த 1-ந்தேதியும், 65 வயது முதியவர் 2-ந்தேதியும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 607 ஆக உயர்ந்தது.
மேலும் நேற்று ஒரே நாளில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 375 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 85 ஆயிரத்து 981 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.  தற்போது தொற்று உள்ள 4 ஆயிரத்து 227 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story