கீரப்பாக்கத்தில் ரூ.45 கோடி ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு தாசில்தார் நடவடிக்கை


கீரப்பாக்கத்தில் ரூ.45 கோடி ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு தாசில்தார் நடவடிக்கை
x
தினத்தந்தி 6 July 2021 4:52 AM GMT (Updated: 6 July 2021 4:52 AM GMT)

கீரப்பாக்கத்தில் ரூ.45 கோடி ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு தாசில்தார் நடவடிக்கை.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் கிராமத்தில் கல்லாங்குத்து வகைப்பாடு உள்ள சுமார் 20 ஏக்கர் அரசு நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத்திற்கு பலர் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், தாம்பரம் ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் மேற்பார்வையில் வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் நேற்று வருவாய் துறை அதிகாரிகள் 3 பொக்லைன் எந்திரங்களுடன் கீரப்பாக்கம் கிராமத்திற்கு சென்றனர்.

பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்போடு அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அரசு நிலத்தை மீட்டனர். மேலும் அதே பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற தாசில்தார் சென்றபோது, அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் நிருபர்களிடம் கூறும்போது, கீரப்பாக்கத்தில் மீட்கப்பட்ட 20 ஏக்கர் நிலத்தின் தற்போதைய மதிப்பு சுமார் 45 கோடி ஆகும். மேலும் இதே கல்லாங்குத்து வகைப்பாடு நிலத்தில் சிலர் வீடு கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இந்த ஆக்கிரமிப்புகள் இன்னும் சில தினங்களில் போலீஸ் பாதுகாப்போடு அகற்றும் பணி தொடங்கும் என கூறினார். அப்போது அவருடன் வண்டலூர் வருவாய் ஆய்வாளர் ரங்கன் உள்பட வருவாய் துறையை சேர்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story